டைம் 100 பட்டியலில் பிரதமர் மன்மோகன் சிங், டெண்டுல்கர்
இப்பட்டியலில் பிரேசில் அதிபர் லூயிஸ் இனேசியோ லூலா டிசில்வாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா நான்காவது இடத்தில் உள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங் குறித்து இந்திய அமெரிக்கரும், பெப்சிகோ நிறுவனத்தின் தலைவருமான இந்திரா நூயி எழுதுகையில், 1991 முதல் 96 வரை இந்தியாவின் நிதியமைச்சராக இருந்து இந்திய மக்களுக்கு பெரும் பணியாற்றியவர் மன்மோகன் சிங். தற்போது பிரதமராக உலக வல்லரசு நாடுகளின் தலைவர்களுக்கு இணையான மதிப்பை மன்மோகன் சிங் பெற்றுள்ளார் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
பெருமாள்சாமி நம்பெருமாள்சாமிக்கு 6வது இடம்
சிறந்த 25 ஹீரோக்கள் பட்டியலில் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
6வது இடத்தில் தமிழகத்தின் டாக்டர் பெருமாள்சாமி நம்பெருமாள்சாமி இடம் பெற்றுள்ளார். 70 வயதான இவர் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை தலைவர் ஆவார். 1970ம் ஆண்டு முதல் இதுவரை 30.6 லட்சம் கண்புரை அறுவைச் சிகிச்சைகளை இவர் மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார்.
சராசரியாக கால் மணி நேரத்திற்கு ஒரு அறுவைச் சிகிச்சையை இவர் செய்துள்ளதாக புகழாரம் சூட்டியுள்ளது டைம் இதழ்.
இப்பட்டியலில் டெண்டுல்கருக்கு 13வது இடம் கிடைத்துள்ளது. இந்தியத் தொழிலதிபர் கிரண் மஜூம்தார் 16வது இடத்தைப் பெற்றுள்ளார்.
கலைஞர்களுக்கான பட்டியலில் சேத்தன் பகத் மட்டுமே இந்தியர் ஆவார். லேடி காகா இதில் முதலிடத்தில் உள்ளார்.
சிந்தனையாளர்கள் பட்டியலில் 20வது இடத்தில் அமார்த்யா சென் உள்ளார்.
டெண்டுல்கர் பெயரில் மாம்பழம்
இதற்கிடையே, டெண்டுல்கரைக் கெளரவிக்கும் வகையில் புதிய வகை மாம்பழத்திற்கு அவருடைய பெயரை வைத்துள்ளனர்.
லக்னோவைச் சேர்ந்த கலிபுல்லா கான் என்பவர் புதிய மாம்பழ ரகங்களை உருவாக்குவதில் நிபுணராக கருதப்படுகிறார். இதுவரை 300க்கும் மேற்பட்ட மாம்பழங்களை இவர் உருவாக்கியுள்ளார். தற்போது புதிதாக உருவாக்கியுள்ள பழத்திற்கு சச்சின் டெண்டுல்கர் பெயரை இவர் சூட்டியுள்ளார்.
மிகச் சிறந்த 2 இந்திய மாம்பழங்களில் ஒட்டு வீரிய ரகமாக இந்த மாங்கனி உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாம்பழம் விற்பனைக்கு அல்ல என அவர் அறிவித்துள்ளார்.
சச்சின் மற்றும் சச்சசினின் நண்பர்கள் மட்டுமே இந்த மாம்பழத்தை சுவைத்து மகிழலாம் என அவர் தெரிவித்துள்ளார். இதேபோல பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் பெயரிலும் ஒரு புதிய மாம்பழத்தை உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார்.