அச்சுறுத்தலுக்கு ஒரு போதும் அடிபணிய மாட்டோம் - ப.சிதம்பரம் !
கோவை: நக்சல்களால், இந்தியாவுக்கு மிகப் பெரிய சவால்களும், சோதனைளும் ஏற்பட்டு வருகின்றது. இதை மன உறுதியுடன் முறியடிக்க வேண்டும். அச்சுறுத்தலுக்கு ஒரு போதும் அடிபணிய மாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி்யின் சேவா தளம் சார்பில் பயிற்சி முகாம் கோவை போத்தனூர் பி.வி.ஜி. திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது இந்த கூட்டத்தில் இதன் நிறைவு நாள் அன்று மத்திய அமைச்சர் சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது
காலத்திற்கேற்ப புதிய கொள்கைகளை உட் புகுந்தி, சிந்தனைகளை உள் வாங்கக்கூடிய மனப்பக்குவத்தை பெற்றுள்ள அரசியல் கட்சியால் தான் நாட்டில் நிலைத்து நிற்க முடியும்.
பேச்சுரிமை, எழுத்துரிமை, தகவலுரிமை, சுதந்திரம், மதச்சார்பின்மை உள்ளிட்டவை காங்கிரஸ் கட்சியின் அடிப்படை லட்சியங்கள் ஆகும்.
புதிய கொள்கைகளை புகுத்தப்பட்டாலும் அடிப்படை லட்சியங்களில் இருந்து காங்கிரஸ் கட்சி பின்வாங்குவதில்லை.
வேலை உரிமை சட்டம், தகவல் உரிமைச் சட்டம் ஆகியவை நீண்ட காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சியின் சாதனைகளாகும். அதே வரிசையில் விரைவில் உணவு உரிமைச் சட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
இதை எல்லாம் காங்கிரஸ் கட்சியின் சாதனை என்று கூறினால் அதை இடது சாரிகள் குறை கூறுகின்றனர்.
மேற்கு வங்கத்தில் 30 ஆண்டுகளும், கேரளத்தில் அடுத்தடுத்து ஆட்சி அமைக்கும் இடது சாரிகள் வேலை உரிமைச் சட்டம், உணவு உரிமைச் சட்டத்தை ஏன் இத்தனை நாட்களாக அமல்படுத்தவில்லை.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் 8.7 சதவீதம் பொருளாதார வளர்ச்சி எட்டியது காங்கிரஸ் ஆட்சியில் மட்டுமே.
வடகிழக்கு மாநிலங்களில் தனி நாடு கோரி போராட்டம் நடத்திய பல இயக்கங்கள், ஆயுதங்களை கீழே போட்டு அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகிவிட்டனர்.
ஆனால், ஆறு மாநிலங்களிலுள்ள நக்சல்கள் இயக்கத்தால் , இந்தியாவுக்கான சவால்களில் மிகப் பெரிய சோதனை ஏற்பட்டு வருகிறது. இதை மனஉறுதியுடன் முறியடிக்க வேண்டும். அச்சுறுத்தலுக்கு ஒரு போதும் நாங்கள் அடிபணிய மாட்டோம் என்றார்.