கோவை செம்மொழி மாநாட்டில் பங்கேற்க ஆட்டோ சங்கர் கூட்டாளி உள்பட 6 கைதிகளுக்கு அழைப்பு
நெல்லை: கோயம்புத்தூர் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு இலக்கிய ஆய்வுக் கட்டுரை அனுப்பிய பாளை மத்திய சிறை ஆயுள் தண்டனை கைதிகள் ஆறு பேருக்கு மாநாட்டில் நோக்கர்களாக பங்கேற்க சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் உலக தமிழ் செம்மொழி மாநாடு ஜூன் 23ம் தேதி துவங்குகிறது. இதையொட்டி இலக்கிய ஆய்வு கட்டுரை, கவிதை எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கிய ஆய்வு கட்டுரை போட்டியில் பாளை மத்திய சிறையை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதிகள் ஆட்டோ செல்வராஜ், சூசை மரியான், கல்கி மோகன், அய்யங்கனி, கிருஷ்ணன், ரமேஷ், பங்கேற்றனர்.
இவர்கள் இலக்கிய ஆய்வு கட்டுரை எழுதி உலக தமிழ் செம்மொழி மாநாட்டு குழுவிக்கு கடந்த மார்ச்சில் அனுப்பி வைத்தனர். இவர்கள் அனுப்பிய கட்டுரை குறித்து பரிசீலனை நடந்தது.
இதற்கிடையில் இவர்கள் 6 பேருக்கும் மாநாட்டில் நோக்கர்களாக பங்கேற்க அழைப்பு விடுத்து இருக்கை எண் குறிப்பிட்டு மாநாட்டு குழு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சிறைத்துறை தலைவர் அனுமதி பெற்று 6 பேரும் முந்தைய நாள் கோயம்புத்தூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடுத்த நாள் மாநாட்டில் பங்கேற்க போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்படுவர் என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆட்டோ சங்கரின் கூட்டாளி
ஆய்வு கட்டுரைகளை செம்மொழி மாநாட்டு குழுவிற்கு அனுப்பிய 6 பேரும் இலக்கிய அறிவு நிரம்பியவர்கள் என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆட்டோ செல்வராஜ் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கொலை குற்றவாளி ஆட்டோ சங்கரின் கூட்டாளி ஆவார். இவர் பிஏ பட்டதாரி. ஆயுள் தண்டனை பெற்று 22 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.
இதேபோல கைதி, கல்கி மோகன் ஓவியங்கள் வரைவதில் நிபுணராம்.
ஆறுபேரும் சிறையில் நடக்கும் கவிதை, கதை, கட்டுரை போட்டிகளில் பலமுறை பங்கேற்று பரிசுகள் பெற்றவர்கள். தமிழக அளவில் இலக்கிய ஆர்வம் காரணமாக பாளை சிறைக்கைதிகளுக்கு மட்டுமே செம்மொழி மாநாட்டில் பங்கேற்க இத்தகைய அழைப்பு கிடைத்துள்ளது.
தேர்வு செய்யப்பட்ட 6 கைதிகளுக்கும் கூட்டங்கள், விழாக்களில் பேசுவது குறித்து சிறை கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி அறிவுரைப்படி சிறை ஆசிரியர்கள் இருதய அரசு, செல்வராஜ் பயிற்சி அளித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி தேர்வில் கூடுதல் தேர்ச்சி, மாநில அளவி்ல் எஸ்எஸ்எல்சி தேர்வில் முதல் இரு இடங்கள், 16 பேர் பட்டமேற்படிப்பில் தேர்ச்சி, இந்த ஆண்டு தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை கழக தேர்வில் 46 பேர் பங்கேற்பு, செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பு என பாளை மத்திய சிறை சாதனை பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
பாளையங்கோட்டை சிறைச்சாலை, நல்ல போதனைகளைக் கொடுக்கும் சோலையாக மாறி வருவது உண்மையிலேயே சந்தோஷமான செய்திதான்.