தீவிரவாத தாக்குதல் நடக்கும் என அமெரிக்கா, கனடா எச்சரிக்கை – உஷார் நிலையில் டெல்லி
டெல்லியில் மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. குறிப்பாக கன்னாட் பிளேஸ், சாந்தினி செளக் ஆகிய இடங்கள் தீவிரவாதிகளின் குறியில் இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இதையடுத்து இந்தப் பகுதிகள் தவிர செங்கோட்டை உள்ளிட்ட தலைநகரின் அனைத்துப் பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
கனடாவும் எச்சரிக்கை
இந்த நிலையில் தற்போது கனடாவும் டெல்லியை தீவிரவாதிகள் குறிவைத்திருப்பதாக எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக தனது நாட்டு குடிமக்களுக்கு கனடா அரசு பிறப்பித்துள்ள சுற்றிலா வழிகாட்டு எச்சரிக்கை செய்தியில், இந்தியாவில் வசிக்கும் கனடிய மக்களும், இந்தியாவுக்கு செல்லும் கனடியர்களும் டெல்லிக்குப் பயணப்படும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக பழையடெல்லியில் உள்ள சாந்தினி செளக் உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் நடைபெறலாம் என அஞ்சப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.