மும்பை தாக்குதல் வழக்கில் நாளை தீர்ப்பு – கசாப்புக்கு என்ன தண்டனை?
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பை நகருக்குள் புகுந்து வெறித்தனமாக தாக்குதல் நடத்தியதில், 25 வெளிநாட்டவர் உள்பட 166 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். 304 பேர் காயமடைந்தனர்.
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அனைவரும் லஷ்கர் இ தொய்பா என்பது விசாரணையின் மூலம் தெரிய வந்தது. பத்து பேரில் 9 பேர் கொல்லப்பட்டு விட, கசாப் மட்டுமே உயிருடன் பிடிபட்ட்டான்.
மும்பை ஆர்தர் சாலை சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளான் கசாப். அங்கேயே அமைக்கப்பட்ட தனிகோர்ட்டில் இந்த வழக்கின் விசாரணை நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்து நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
இந்த தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த பஹீம் அன்சாரி, சபாபுதீன் அகமது ஆகியோர் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் உ.பி. சிறையில் ஏற்கனவே அடைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கசாப், அன்சாரி, அகமது ஆகியோர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.