குஷ்புவை வரவேற்கிறேன்!-ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: நடிகை குஷ்பு கவர்ச்சியானவர், நல்ல புத்திசாலி... அவரது வருகை காங்கிரஸ் கட்சிக்கு மேலும் நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும் என்று காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
மும்பையில் வசித்தபோது குஷ்பு குடும்பத்தினர் காங்கிரசில் இருந்தனராம். தனது படுக்கையறையில் ராஜீவ் காந்தி படங்கள் வைத்திருந்ததாகவும் அவரின் தீவிர ரசிகை நான் என்றும் குஷ்பு கூறியிருந்தார்.
இதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகியுள்ளது.
சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் குஷ்புவின் வருகை காங்கிரசுக்கு பலம் சேர்ப்பதாக அமையும் என்று அக்கட்சி தலைவர்கள் கருதுகிறார்கள். தேர்தல் பிரசாரத்துக்கும் அவர் உதவுவார் என்று நம்புகின்றனர்.
குஷ்பு காங்கிரசில் இணைவது பற்றி தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவரான இளங்கோவனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
குஷ்பு காங்கிரசில் சேர்ந்தால் அவரை வரவேற்கும் முதல் ஆளாக நான் இருப்பேன். முற்போக்கு சிந்தனையாளர்களுக்கும் சுதந்திரமாக பேசுபவர்களுக்கும் காங்கிரஸ் சிறந்த இடம்.
குஷ்பு போல் புத்திசாலித்தனமான பெண்கள் சமூக பிரச்சனைகள் சம்பந்தமான தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு காங்கிரஸ்தான் சிறந்த இடம்.
பொதுவாக நடிகைகள் கவர்ச்சியாக இருப்பார்கள். ஆனால் குஷ்பு கவர்ச்சியும், புத்திகூர்மையும் உள்ளவர் என்றார்.
தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் சுதர்சனம் கூறுகையில், நடிகை குஷ்பு புத்திசாலித்தனமான பெண். காங்கிரசில் அவர் சேருவதை முழு மனதோடு வரவேற்கிறேன். குஷ்பு பிரபலமானவர். அவர் காங்கிரசில் இணைவது கட்சி வளர்ச்சிக்கு உதவும். சட்டமன்ற தேர்தலுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
கோபண்ணா கோபம்:
ஆனால், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒருவரான கோபண்ணா குஷ்புவின் கருத்தை விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், திருமணத்திற்கு முன்பு உறவு கொள்வதில் தவறில்லை என்று கூறுவதற்கு நடிகை குஷ்புவுக்கு இருக்கும் உரிமையை உச்ச நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது.
சமூகத்தில் சில மரபுகள், பண்பாட்டின் அடிப்படையில் இப்படித்தான் வாழ வேண்டும் என்று கூறுகின்றன. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று கூறுபவர்களை சட்டம் ஏற்றுக் கொண்டாலும் அந்த கருத்தை சமூகம் ஏற்றுக் கொள்ளாது என்றார்.