நகராட்சியைக் கண்டித்து பண்ருட்டியில் மே7ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்- ஜெ.
சென்னை: பண்ருட்டி நகராட்சியின் சீர்கேட்டை கண்டித்து அங்கு மே 7ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
பண்ருட்டி நகராட்சி நிர்வாக சீர்கேட்டிற்குக் காரணமான பண்ருட்டி நகர மன்ற திமுக தலைவரையும், நகராட்சி நிர்வாகத்தையும் திமுக அரசையும் கண்டித்தும் தவறுகளை சுட்டிக்காட்டும் அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்வதை நிறுத்தி விட்டு மக்கள் நலத் திட்டங்களில் கவனம் செலுத்த வலியுறுத்தியும், அதிமுக கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுகவின் சார்பில் 7.5.2010 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணியளவில் பண்ருட்டி பேருந்து நிலையம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்துலக எம்ஜிஆர் மன்றத் தலைவர் டாக்டர் பி.எச்.பாண்டியன் தலைமையிலும், கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் எம்.சி.சம்பத் முன்னிலையிலும் நடைபெறும்.
மக்கள் நலனை முன் வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயல்லிதா.