பத்லா ஹவுஸ் வழக்கு – விரைவாக முடிக்க சிதம்பரம் உத்தரவு
டெல்லி: டெல்லி, பத்லா ஹவுஸ் என்கெளன்டர் வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க உத்தரவிட்டுள்ளதாக உள்துறைஅமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இதுகுறித்து ராஜ்யசபாவில் இன்று கேள்வி நேரத்தின்போது ப.சிதம்பரம் பேசுகையில், பத்லா ஹவுஸ் என்கெளன்டர் வழக்கை விரைவுபடுத்துமாறு இன்று காலையில் எனது அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
விசாரணை குழுக்கள் தங்களது பணியை தனித் தனியாக செய்துவருகின்றன. ஆதாரங்களின் அடிப்படையில்தான் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்.
அதேசமயம், ஆதாரங்களே இல்லாதவர்கள் மீது வழக்கை தொடரும் எண்ணம் அரசிடம் இல்லை என்றார்.
கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி தீவிரவாதிகள் என்று சந்தேகப்படுவோர் மீது டெல்லி போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 பேரும், போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.சி.சர்மாவும் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் இறுதிக் குற்றப்பத்திரிக்கை கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது.