மண்ணில் புதையும் மண் பாண்ட தொழில்!
-கே.எம்.கே.இசக்கிராஜன்
நாகரீக மோகத்தில் நலிவடைந்து வரும் பாரம்பரிய தொழில்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் கலையம்சம் கொண்ட மண்பாண்ட தொழிலும் சேர்ந்து அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளது.
தொன்மை வாய்ந்த இத்தொழில் புரிபவர்கள் வாழ்க்கை சோற்றுக்கே அல்லல்படும் அவலம் நோக்கி நகர்ந்து அவர்களின் எதிர்கால கனவும் தகர்ந்து வருகிறது. தமிழகத்தின் மண்பாண்ட தொழில் பழங்கால பாரம்பரியமிக்க தொழில். மண்பாண்டங்களில்தான் சமையல் செய்யும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்தது.
கால சுழற்சியில் அலுமினிய பொருட்கள் ஆதிக்கம் தலைதூக்க தொடங்கிய போது சிறு மாற்றம் நம்மிடம் ஏற்பட்டது. பின்னர் அது பரிணாம வளர்ச்சி பெற்று பெரும் பணம் படைத்தவர்களின் இல்லங்களில் மின்னும் வெள்ளி பொருட்களுக்கு இணையாக சில்வர் பொருட்கள் 1985 வாக்கில் வேகமாக வளர்ச்சி பெற்று கிராமத்து ஓலை குடிசைக்குள்ளும் ஓடிவந்து புகுந்தது
அப்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு வாங்குவதற்கு வார்டு உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டி போட்டவர்கள் எவர்சில்வர் தட்டும், டம்பளரும் கொடுத்து வெற்றி பெற்ற வரலாறும் உண்டு. இப்படி மெல்ல மெல்ல மண்பாண்ட பொருட்கள் நம்மை விட்டு அகலத் தொடங்கியதும் எவர்சில்வர் பாத்திரங்கள் ஆதிக்கம் அதிகரித்ததும் இத்தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு முக்கிய காரணம்.
களி மண்ணால் செய்யப்படும் இந்த மண்பாண்டப் பொருட்கள் வெயிலில் காய வைக்கப்பட்டு சுள்ளைகளில் வைத்து சிகப்பு நிறம் வரும் வரை சுடவைத்து பின்னரே சந்தைக்கு விற்பனைக்கு மண்பாண்டப் பொருட்களாக வருகிறது. இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியில் மண்பாண்ட பொருட்களும், முதுமக்கள் தாழியும், மண்ணால் ஆன ஆயுதங்களும் கண்டெடுக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நெல்லை, குமரி, திண்டுக்கல், தஞ்சை, மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்கள் அதிகம் வசித்து வருகி்ன்றனர். இம்மக்கள் தற்போது அடுப்பு, பானை, கலயம் போன்ற பொருட்களை கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று நகர, கிராம பகுதிகளில் மண்பானை சமையல் என்று போர்டு போட்டு உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் கேரள மாநில மக்கள் மண்பாண்ட சமையலையே விரும்பி சாப்பிடுகிறாகள். இதனால்தான் இத்தொழில் புரிபவர்கள் வீடுகளிலும் இன்னும் அடுப்பில் பூனை குடி புகாமல் நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது.
இத் தொழிலாளர்கள் ஆறு, குளங்களிலிருந்து மண் எடுத்து வந்தால் வருவாய் துறையினர் தடுத்து நிறுத்தி பணம் கறந்து விடுகின்றனர். இதுவும் அவர்களைப் பாதிக்கிறது.
பொங்கல் மற்றும் விநாயகர் சதுர்த்தி ஆகிய இரு சீசன்களில்தான் நல்ல உணவை இவர்கள் நாக்கு சுவைக்கிறது. மற்ற நாட்களில் சுவையற்ற உணவைப் போல்தான் இவர்கள் வாழ்க்கையும் சுகமற்று சோகத்தோடு 10 மாதங்கள் தொடர்கிறது. இம்மக்களி்ன் வாழ்வாதாரம் உயர மண்பாண்ட கூட்டுறவு தொழில் சங்கம் மூலம் கடனுதவி அளித்து கண்ணீரை துடைக்குமா அரசு......