உங்களை நம்புகிறேன் என்று மன்மோகன் கூறியதாக பாக். பிரதமர் தகவல்
இஸ்லாமாபா: திம்புவில் நடந்த சார்க் மாநாட்டில் சந்தித்துப் பேசியபோது, மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறுகிறீர்கள். உங்களை நான் நம்புகிறேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் தன்னிடம் கூறியதாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கிலானி பேசுகையில், பூடான் தலைநகர் திம்புவில் சமீபத்தில் நடந்த சார்க் மாநாட்டின்போது நானும், பிரதமர் மன்மோகன் சிங்கும் சந்தித்துப் பேசினோம்.
அப்போது என்னிடம் பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், மும்பை தாக்குதல் வழக்கில்தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று கூறுகிறீர்கள். அதை நான் நம்புகிறேன், உங்களை நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான போர்க்காலம் முடிந்து விட்டது. இருநாடுகளும் பேச்சுவார்த்தை டேபிள் முன் அமர்ந்து தங்களுக்கிடையே உள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றார் கிலானி.