போலீஸ் ஸ்டேஷனில் கொலை கைதி தப்பியோட்டம்
நாகர்கோவில்: கொலை வழக்கில் தொடர்புடைய கைதி போலீஸ் வசம் சிக்கிய நிலையில் அவர் கைவிலங்குடன் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓட்டம் பிடித்தார்.
குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே ஆண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன். இவர் மீது தக்கலை போலீஸ் ஸ்டேஷனில் 2007ல் நடந்த ஒரு கொலை வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாகவிட்ட இவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் சுந்தரேசன் சொந்த ஊரான ஆண்டிதோப்பு பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் ரகசியமாக அவரை கண்காணித்து வந்தனர்.
நேற்று இரவு ஆண்டிதோப்பு பகுதியில் வைத்து அவரை கைது செய்தனர். பின்னர் வெற்றிக்கோடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தக்கலை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அங்கிருந்த சில பகுதிகள் பிரிக்கப்பட்டு கொற்றிக்கோடு போலீஸ் ஸ்டேஷன் அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்டதால் சம்பந்தப்பட்ட கொலை வழக்கும் அங்கு மாற்றப்பட்டது.
போலீஸ் ஸ்டேஷனில் பிடித்து வைத்திருந்த நிலையில் நேற்று அதிகாலையில் சுந்தரேசன் சிறுநீர் கழிக்க வேண்டும் என போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அவரை போலீசார் வெளியே அழைத்து வந்துள்ளனர். அப்போது பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாரை தாக்கி விட்டு சுந்தரேசன் கைவிலங்குடன் தபபியோடினார். போலீசார் துரத்தியும் அவரை பிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.