மணல் திருட்டுகளால் அதிகரிக்கும் மரணங்கள்... 2 மாணவர்கள் பலி
நெல்லை: ஆறு, குளங்களில் சரமாரியாக நடைபெறும் மணல் திருட்டு காரணமாக மரணங்கள் அதிகரித்து வருகின்றன. நேற்று நெல்லை தாமிரபரணி ஆற்றில் 2 சிறுவர்கள் பரிதாபமாக ஆற்றில் மூழ்க இறந்துள்ளனர்.
பெருகை நதியென்று பெருமை பொங்க பேசப்படும் திருநெல்வேலி மாவட்ட தாமிரபரணியாற்றின் புகழ் இன்று மங்கி மரண நதியாக பேசப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தென்பொதிகை மலையென்று வர்ணிக்கப்படும் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகி காட்டாறாய் ஓடிவரும் தாமிரபரணி நதி தூத்துக்குடி மாவட்டம் வரையுள்ள பல லட்சம் ஏக்கர் நிலங்களை பசுமை பூமியாக்கி லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகிறது. இந்த நதி உற்பத்தியாகும் இடத்தில் இருந்து போய் முடியும் இடம் வரை பல நூறு கிலோ மீட்டர் உள்ளது. இந்த நதியின் மணலை நம்பி இன்று அரசாங்கம் பட்ஜெட் போடும் அளவுக்கு உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மணல் குவாரிகள் பொதுப்பணித் துறை மூலம் நடத்த முடிவு எடுக்கப்பட்டு திட்டமும் செயல்படுத்தப்பட்டது. அரசு லாபம் அளவோடும், அரசியல்வாதிகளின் லாபம அளவற்றும் போக, ஆட்சி மாற்றம் உருவாக திமுக ஆட்சி அரியணையில் அமர்ந்தபின் அண்டை மாநிலங்களில் ஒப்பந்த அடிப்படைகளில் இருந்து பல ஆயிரமாயிரம் டிராஸ் லாரிகள் தாமிரபரணி நதிக்கரையிலும், நதியினுள்ளும் நவீன ரக இயந்திரங்கள் மூலம் பல நூறு ஆண்டுகால சேமி்ப்பாய் இருந்த மணல்கள் லோடு லோடாய் தினமும் 24 மணி நேரமும் தமிழக-கேரள எல்லையான நாகர்கோவில் வழியாகவும், புளியரை வழியாகவும் கேரளாவை நோக்கி பாய்ந்தன.
அதில் மணல் லாரிகள் மோதி பலியானவர்கள் ஏராளாம் அன்று... இன்றோ தாமிரபரணி நதியில் ஏற்பட்டுள்ள பல அடி ஆழமுள்ள மணல் அள்ளப்பட்ட பள்ளங்களில் விழுந்தும், நீர் சுழல்களில் சிக்கியும் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் உத்திரபிரதேச மாநில வாலிபர்கள் 2 பேர், ஏப்ரல் மாதம் அம்பை தாமிரபரணி ஆற்றில் குளித்து கொண்டிருந்த 3 வாலிபர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் நேற்று சீவலப்பேரி பாலமடை தாமிரபரணி ஆற்றில் குளித்து கொண்டிருந்த ரயில்வே காலனி பகுதியை சேர்ந்த செல்வரங்கன், ரங்கராஜ், என்ற 2 சிறுவர்கள் முத்தலாங்குறிச்சியை சேர்ந்த மகேஸ்வரன் ஆகியோரும் பலியாகியுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களில் மட்டும் குளத்தில் மூழ்கி சிறுவர்கள், ஆற்றில் மூழ்கிய சிறுவர்கள், பெரியவர்கள் என சுமார் 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆறு, குளங்களில் மண், மணல் எடுக்கும் சக்திகளை தயவு தாட்சண்யமின்றி தண்டித்தால் மட்டுமே உயிர் பலிகளை இனியும் தொடராமல் காப்பாற்ற இயலும். தமிழக அரசு தாமிரபரணி மாவட்ட மக்களை காப்பாற்றுமா....