ராஜா, மணிசங்கர அய்யர், சுதீப் பந்தோபாத்யாயாவுக்கு எதிராக பெரும் அமளி - நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
இன்று காலை லோக்சபாவும், ராஜ்யசபாவும் பெரும் அமளியுடன் தொடங்கின.
ஸ்பெக்ட்ரம் பிரச்சினை தொடர்பாக அமைச்சர் ராஜா விலக கோரி அதிமுக உறுப்பினர்கள் அமளியில் இறங்கினர்.
இதே போல சிபிஎம் உறுப்பினர் பாசுதேவ் ஆச்சார்யாவை அவதூறாகப் பேசிய திரினமூல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பந்தோபாத்யாயா மன்னிப்பு கேட்க கோரி இடதுசாரி உறுப்பினர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இதனால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. சுதீப்பின் செயலுக்கு சபாநாயகர் மீரா குமாரும் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறுகையில், திரினமூல் காங்கிரஸ் உறுப்பினர் சுதீப் பந்தோபாத்யாவின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடைபெறாமல் அவர் பார்த்துக் கொள்வார் என்று நம்புகிறேன் என்றார்.
ஆனால் அதனால் இடதுசாரி உறுப்பினர்கள் சமாதானமடையவில்லை. சுதீப் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று வற்புறுத்தி கோஷம் எழுப்பினர். ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறி விட்டார் சுதீப்.
அவர் கூறுகையில், நான் எப்படி நடக்க வேண்டும் என்று யாரும் எனக்குச் சொல்லத் தேவையில்லை. நான் பேசியது நாடாளுமன்ற விதிகளுக்குப் புறம்பானது என்று யாராவது நிரூபித்தால் நான் மன்னிப்பு கேட்கத் தயார் என்றார்.
இந்த நிலையில் இடதுசாரி உறுப்பினர்களுடன், பாஜக உறுப்பினர்களும் இணைந்து கொண்டனர். இதனால் அமளி அதிகரித்தது. இதையடுத்து அவை பிற்பகல் 12மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் சபை மீண்டும் கூடியபோதும் அமளி தொடரவே பிற்பகல் 2 மணி வரை அவையை ஒத்திவைத்தார் சபாநாயகர் மீரா குமார்.
ராஜ்யசபாவில் அய்யருக்கு எதிராக அமளி
இதேபோல ராஜ்யசபாவில் காங்கிரஸ் உறுப்பினர் மணிசங்கர அய்யருக்கு எதிராக பாஜகவினர் போர்க்கொடி தூக்கினர். நியமன உறுப்பினரான அய்யர், பாஜக தலைவர்களான அருண் ஜேட்லி, வெங்கையா நாயுடு ஆகியோரை விமர்சித்துப் பேசியதால் அமளி நிலவியது.
இதுகுறித்து பாஜக துணைத் தலைவர் எஸ்.எஸ். அலுவாலியா கூறுகையில், மணிசங்கர அய்யர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் ராஜ்யசபாவை நடத்த விட மாட்டோம் என்றார்.
தொடர்ந்து அமளி நிலவவே முதலில் 20 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ராஜ்யசபா பின்னர் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் நாடாளுமன்ற பாஜக கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திற்குப் பின்னர் அலுவாலியா செய்தியாளர்களிடம் கூறுகையில், ராஜ்யசபாவில் பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று அரசு விரும்பினால் மணிசங்கர அய்யர் உடனடியாக தான் கூறியதை வாபஸ் பெற வேண்டும், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், ராஜ்யசபாவை நடத்த விட மாட்டோம் என்றார்.