சென்னையில் கார்டு இல்லாமல் ஓடிய மின் ரயில் – பயணிகள் பீதி
சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு இன்று காலை 6-05 மணிக்கு மின்சார ரயில் புறப்பட்டு சென்றது. ரயிலில் ஏராளமான பயணிகள் இருந்தனர். கடைசி பெட்டியில் இருந்து கார்டு சிக்னல் கொடுத்தவுடன் ரயில் புறப்பட்டு சென்றது.
இந்த நிலையில், அத்திப்பட்டு நிலையத்தை கடந்து சென்றபோது ரயிலில் மின் விசிறிகள் இயங்கவில்லை. நந்தியம்பாக்கம் நிலையத்தில் ரயில் நின்றபோது சில பயணிகள் மின்விசிறி ஓடாததது பற்றி கார்டிடம் புகார் தெரிவிக்க சென்றனர்.
ஆனால் அவர் அங்கு இல்லை. இதற்கிடையில் ரயில் புறப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். கார்டு இல்லாமலேயே ரயில் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது.
என்ஜின் டிரைவருக்கு ரயில் புறப்பட்டு செல்ல சிக்னல் தரக்கூடியவர் கார்டாதன். ஆனால் அவர் இல்லாமலேயே, நந்தியம்பாக்கம், மீஞ்சூர், அனுப்பம்பட்டு ஆகிய ரயில் நிலையங்களை கடந்து பொன்னேரி நிலையத்திற்கு வந்தது.
ரயில் நிலையத்தில் நின்றவுடன் பயணிகள் சிலர் என்ஜின் டிரைவரிடம், பெட்டியில் கார்டு இல்லை. அவர் இல்லாமல் 4 நிலையங்களை கடந்து வந்துவிட்டது. எனவே இனிமேல் ரயிலை இயக்கவேண்டாம் என்று கூறி ரயிலை செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து 6.55 மணிக்கு ரயில் பொன்னேரியுடன் நிறுத்தப்பட்டது.
ஏற்கனவே கடந்த ஆண்டு சென்டிரல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மின்சார ரயிலை ஒரு மர்ம நபர் திடீரென எடுத்துச் சென்று வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தினார்.இதில் நான்கு பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தே பயணிகள், ரயிலை தொடர்ந்து செல்ல விடாமல் நிறுத்தினர்.
இந்த நிலையில், அப்போது திருவள்ளூரில் இருந்து பொன்னேரிக்கு மற்றொரு மின்சார ரயில் வந்தது. அதிலிருந்து வெள்ளை சீருடை அணிந்த ஒருவர் ஓடி வந்தார். அவர்தான் கும்மிடிப்பூண்டி ரயிலின் கார்டு என தெரிய வந்தது. அவரிடம் பயணிகள் எங்கே போனீர்கள்? என்று சரமாரியாக கேள்வி கேட்டனர். அதற்கு அந்த கார்டு பதிலளிக்கவில்ல். அதிகாரிகள் விசாரித்தபோதும் அவர் பதிலளிக்காமல் மெளனமாக இருந்தார்.
அந்த கார்டு வந்த பிறகு ரயில்7.20 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்குக் கிளம்பிச் சென்றது.
கார்டு ஏன் ரயிலில் ஏறவில்லை, திடீரென எங்கே போனார் என்ற பயணிகளின் கேள்விகளுக்கு கடைசி வரை விடை கிடைக்கவில்லை. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளும் எந்தவிளக்கத்தையும் தரவில்லை.