அனந்தகுமார் பேச்சுக்காக லாலு பிரசாத் யாதவிடம் மன்னிப்பு கேட்டது பாஜக
லோக்சபாவில் நேற்று ஜாதி வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடர்பான விவாதம் நடந்தது. அப்போது கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் அனந்த குமாருக்கும், லாலுவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.
அப்போது லாலு நாட்டை விற்க முயலுகிறார். ஊடுறுவல்காரர்களுடன் இணைந்து செயல்படுகிறார். அவர் ஒரு தேச துரோகி என்று கடுமையாக சாடினார் அனந்தகுமார். இதனால் கடும் கோபமடைந்த லாலு, பதிலுக்கு அனந்தகுமாரை கடுமையாக விமர்சித்தார்.
அனந்தகுமார் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் கண்டிப்புடன் கூறியுள்ளன. ஆனால் தான் மன்னிப்பு கேட்க முடியாது என்று அனந்த குமார் கூறி விட்டார்.
இந்த நிலையில், இன்று லோக்சபாவில் லாலுவிடம் சுஷ்மா சுவராஜ் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
இன்று காலை சபை கூடியதும் எழுந்த சுஷ்மா சுவராஜ், உறுப்பினர் அனந்தகுமார் நேற்று கூறிய வார்த்தைகளுக்காக நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
அப்போது லாலு எழுந்து ஏதோ பேச முயன்றார். இதையடுத்து சிரித்துக் கொண்டே லாலு பிரசாத் சார்பிலும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
தொடர்ந்து சுஷ்மா பேசுகையில், அவையில் பல முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. எனவே இந்தப் பிரச்சினையை இத்துடன் விட்டுவிட வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
அப்போது அவையில் இருந்த அனந்தகுமார் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.