மதிமுக தொழிற்சங்க விவகாரம்: அதிமுக எம்எல்ஏக்கள் அமளி-சபாநாயகர் எச்சரிக்கை
சென்னை: கோவையில் மதிமுக தொழிற்சங்க அலுவலகத்தை திமுகவினர் கைப்பற்றிக் கொண்டது தொடர்பாக சட்டசபையில் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை சபாநாயகர் ஆவுடையப்பன் அவர்களை எச்சரித்தார்.
இன்று காலை, சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் அதிமுக மற்றும் மதிமுக உறுப்பினர்கள் கோவாயில் மதிமுக தொழிற்சங்க அலுவலகத்தை திமுகவினர் கைப்பற்றிக் கொண்டது தொடர்பாக பிரச்சினை எழுப்பினர். ஆனால், தொழிற்சங்க பிரச்சனை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் தற்போது இதுகுறித்து விவாதிக்க முடியாது என்று சபாநாயகர் கூறினார்.
ஆனால், தொடர்ந்து உறுப்பினர்கள் குரல் எழுப்பியதால் மதிமுக உறுப்பினர் சதன் திருமலைக்குமாருக்கு இதுகுறித்து பேச சபாநாயகர் ஆவுடையப்பன் அனுமதி அளித்தார்.
அவர் பேசுகையில், கோவை மற்றும் பெரியார் மாவட்ட திராவிட பஞ்சாயத்து தொழிற்சங்கம் கடந்த 1960ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த சங்கம் கடந்த 1993ம் ஆண்டு மதிமுக வசம் இருந்தது.
அப்போது குறுக்கிட்ட சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் ஏதோ பேசினார். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து அதிமுக உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்து, அமைச்சர் துரைமுருகனை பேச அனுமதித்தார்.
இதைத் தொடர்ந்து துரைமுருகன் பேசுகையில், மதிமுக உறுப்பினர் பேசியது தொடர்பாக இந்த பிரச்சனை குறித்து 2 நீதிமன்றகள் இரண்டு விதமான தீர்ப்புகள் வழங்கியுள்ளன. தற்போது இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் உள்ளது.
இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. அவ்வாறு இருக்கும் போது சட்டசபையில் இதுகுறித்து விவாதிப்பது நியாயமானது அல்ல. உறுப்பினர் பேசியது குறித்து நான் பதில் அளித்தால் அது நீதிமன்ற தீர்ப்புக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ அமைந்துவிடும்.
எனவே இதுகுறித்து விவாதிப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது. இந்த பிரச்சனை குறித்து நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை நடைபெற உள்ளதால், இந்த பிரச்சனை குறித்து நாளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் என்றார்.
இதற்கு அதிமுக உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், சின்னசாமி, செ.ம.வேலுச்சாமி, ஆகியோர் எழுந்து நின்று உரத்த குரலில் கூச்ச லிட்டனர். இதையடுத்து தொடர்ந்து இது போல செயல்பட்டால் நடவடிக்கை எடுப்பேன் என்று சபாநாயகர் எச்சரிக்கை விடுக்கவே பிரச்சினை முடிவுக்கு வந்தது.