தென்காசி சார் பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு- ரூ. 22,565 பணம் பறிமுதல்
தென்காசி: தென்காசி சார் பதிவாளர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் போலீசார் ரெய்டு நடத்தியதி்ல் கணக்கில் வராத ரூ.22 ஆயிரத்து 565 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசி ரயில்வே ரோட்டில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு பத்திர பதிவு, வில்லங்க சான்றிதழ், பத்திர நகல் உள்ளிட்டவர்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக தொகை வாங்குவதாக விஜிலென்ஸ் போலீசாருக்கு புகார் சென்றன.
இதையடுத்து விஜிலென்ஸ் டிஎஸ்பி மனோகர குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் மெக்லாரின் எஸ்கால், ஏட்டுகள் முத்து, தெய்வகண்ராஜா, போலீசார் ஸ்டீபன் செல்வகுமார், ராதாகிருஷ்ணன், அன்பு நிதி உள்ளிட்டோர் நேற்று மாலை தென்காசி சார் பதிவாளர் அலுவலத்தில் திடீர் ரெய்டு நடத்தினர்.
விஜிலென்ஸ் போலீசார் அலுவலகத்திற்குள் சென்றதும் அலுவலக கதவு, ஜன்னல் கதவு அடைக்கப்பட்டது. டிஎஸ்பி தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.22 ஆயிரத்து 565 ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அலுவலக கழிவறை, குப்பை தொட்டி, அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இதுகுறித்து விஜிலென்ஸ் டிஎஸ்பி மனோகரகுமார் கூறுகையில்,
தென்காசி 2 ம் எண் இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டாத 22,565 ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சார்பதிவாளர் கஸ்தூரி, இளநிலை உதவியாளர் பீர்முகமது, அலுவலக உதவியாளர் காதர் முகைதீன் மற்றும் இவர்களை பணியில் அமர்த்திய 4 பேர் இருந்தனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.