தமிழகத்தில் கன்னட பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பிக்கவில்லை-அமைச்சர்
சென்னை: தமிழகத்தில் உள்ள கன்னட மொழி பள்ளிகள் உட்பட எந்த சிறுபான்மை பள்ளிகளையும் மூட தமிழக அரசு எந்த ஆணையும் பிறப்பிக்கவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், பா.ம.க. உறுப்பினர் வேல்முருகன் ஆகியோர் தமிழகத்தில் உள்ள கன்னட மொழி பள்ளிகள் மூடப்போவதாக வந்துள்ள செய்திகள் குறித்து பிரச்சனை எழுப்பினர்.
இதற்கு பதிலளி்த்த தென்னரசு, தமிழக அரசால் 2006ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு தமிழ் கற்பதற்கானச் சட்டம் மற்றும் அதனைத் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி 2006-2007ம் கல்வியாண்டு முதல் தமிழ்மொழி கட்டாயப் பாடமாக (முதல் பாடமாக) அனைத்து பள்ளிகளிலும் கற்பிக்கப்படும் என ஆணையிடப்பட்டுள்ளது.
அதன்படி 2006-07ம் கல்வியாண்டில் முதல் வகுப்பில் தொடங்கி படிப்படியாக ஒவ்வொரு உயர் வகுப்பிலும் தமிழ் குரல் பாடமாக கற்பிக்கப்பட்டு வருகிறது. பிற மொழியை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள் அவரது தாய் மொழியினை கற்றிட வழிசெய்யும் வகையில், இந்த ஆணையின் தமிழ் மொழியைத் தவிர பிற மொழிகளை தாய் மொழியாக கொண்ட மாணவர்கள் தங்கள் தாய் மொழியை விருப்ப பாடமாக கற்றுக் கொள்ளலாம் என வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தற்போது அமல்படுத்தப்பட உள்ள சமச்சீர் கல்வி முறையில் நான்கு வாரியங்கள் பின்பற்றி வந்த பாடத் திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே பாடத்திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நான்கு வாரிய பக்கங்களில் பயிலும் மாணவர்கள் அனைவரும் ஒரே பாடத்திட்டத்தினை பயன்படுத்துவார்கள்.
ஆனால் பள்ளிகள் தற்போது தாங்கள் பின்பற்றி வரும் பயிற்று மொழிகளில் எவ்வித மாற்றமும் இருக்காது. எனவே, தமிழ் மொழி தவிர பிற சிறுபான்மை மொழி வழிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தொடர்ந்து தங்கள் மொழிகளிலேயே பாடங்களை கற்கலாம்.
மேலும், சிறுபான்மை மொழி பாடநூல்கள் 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு தொடர்ந்து இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. சிறுபான்மைப் பள்ளிகளில் பிற பாடங்கள் அம்மொழி வழியாகவே கற்பிக்கப்படுகின்றன.
எனவே, சமச்சீர் கல்வி முறையில் பிற மொழிவழி மாணவர்கள் மீது தமிழ் கட்டாயப்படுத்தப்படுகிறது என்பது தவறான செய்தியாகும். கர்நாடக முதல்வர் எதியூரப்பா செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசும்போது, தமிழகத்தில் இயங்கிவரும் கன்னட மொழி வழிப் பள்ளிகளை மூடிவிட தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளதாக தான் ஊடகங்கள் வாயிலாக அறிந்திருப்பதாகவும், இதுகுறித்து தமிழக அரசுடன் பேசவிருப்பதாகவும் தெரிவித்துள்ளதாகச் செய்தி வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களில் கன்னடத்தை பயிற்று மொழியாக கொண்ட 53 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் சுமார் 3,946 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். 185 கன்னட இடைநிலை ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.
கடந்த 2009-10ம் கல்வியாண்டில் காலியேற்பட்ட 23 கன்னட மொழி இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் 14 கன்னட மொழி வழி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 4 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களையும் நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பட்டியல் கோரப்பட்டுள்ளது.
கன்னட மொழி வழிப்பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மை மொழிப் பள்ளிகளுக்கும் சிறுபான்மை மொழிகளில் பாடநூல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. செயல்வழிக்கற்றல் முறையில் மாணவர்கள் எளிதாக கற்க கன்னட மொழியில் கற்பித்தல் அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழகத்தில் உள்ள கன்னட மொழி பள்ளிகள் உட்பட எந்த சிறுபான்மை பள்ளிகளையும் மூடுவதற்கு தமிழக அரசு எவ்வித ஆணையும் பிறப்பிக்கவில்லை, அத்தகைய கருத்துரு ஏதும் அரசின் பரிசீலனையில் இல்லை. இப்பள்ளிகள் திறம்பட செயல்படுவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து வருகிறது என்றார்.