ஒரிசாவில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் ஏராளமான நக்சலைட்கள் பலி
கோராபூத்: ஒரிசா மாநிலத்தில் நக்சலைட் வேட்டைப் படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் ஏராளமான நக்சலைட்கள் பலியானார்கள்.
ஒரிசா மாநிலம் கோராபூத் மாவட்டம், நாராயணப்பட்டனா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நக்சலைட் வேட்டையில்தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஒரிசா போலீஸாரும், நக்சலைட் வேட்டைப் படையினரும்இணைந்து இந்த அதிரடித் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதில் பல நக்சலைட்கள் பலியானதாக கூறப்படுகிறது. எத்தனை பேர் என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை. ஆனால் குறைந்தது 10 பேர் பலியாகியிருப்பதாக கூறப்படுகிறது.
வேட்டை நடந்த இடத்தை விட்டு நக்சலைட்கள் இறந்தவர்களின் உடல்களுடன் ஓடி விட்டனர். அங்கு போய்ப் பார்த்தபோது உடல்களை தரையில் இழுத்துச் சென்ற தடங்கள் பெருமளவில் காணப்படுவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பெருமளவிலானோர் உயிரிழந்திருக்கலாம் என்பதை இது காட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.