'பொர்ரா குகைகள்' ஆந்திராவுக்கே சொந்தம்-உச்ச நீதிமன்றம்!
கிழக்குக் கடலோரத்தில் ஒரிஸ்ஸா எல்லையில் ஆனந்தகிரி மலைத் தொடரில் அரக்கு பள்ளத்தாக்கு என்ற இடத்தில் அமைந்துள்ள இந்தக் குகை உலகம் முழுவதும் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இதன் மூலம் ஆந்திர அரசுக்கும் நல்ல வருமானம் கிடைத்து வருகிறது.
1807ம் ஆண்டு வில்லியம் கிங் ஜார்ஜ் என்ற ஆங்கிலேயரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் குகை நாட்டின் மிகப் பெரிய குகைகளில் ஒன்றாகும். மிக ஆழமான இந்தக் குகையின் வாயிலில் ஒரு சிவலிங்கமும் உள்ளது. இதை தரிசிக்கவும் ஏராளமான பக்தர்கள் வருவதுண்டு.
ஆனால், இந்தக் குகை அமைந்துள்ள பகுதி தனக்கு சொந்தமானது என்று ஒரிஸ்ஸா மாநிலம் பல ஆண்டுகளாகவே உரிமை கோரி வருகிறது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தது. அதில் பொர்ரா குகைகள் எங்கள் மாநிலத்தில்தான் அமைந்துள்ளது. அதை ஆந்திரா தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. அதை மீட்டுத் தர வேண்டும் என்று கோரியிருந்தது.
ஆனால், விசாரணையின் போது ஆந்திர அரசு பொர்ரா குகைகள் ஆந்திராவில் இருப்பதற்கான வரலாற்று, புவியியல் ஆதாரங்களை தாக்கல் செய்தது. ஆனால் ஒரிஸ்ஸா எந்த ஆதாரமும் தரவில்லை.
இதையடுத்து இந்தக் குகைகள் ஆந்திராவுக்குத்தான் சொந்தம், அதற்கான ஆதாரங்கள் வலுவாக உள்ளன. ஒரிஸ்ஸா அரசு இந்தக் குகைகளுக்கு சொந்தம் கொண்டாட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தக் குகையில் சில அரிய வெளவ்வால்கள், செடிகளும் உள்ளன. இதனால் இந்தப் பகுதியில் சுரங்கப் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விசாகணப்பட்டினத்தில் இருந்து ரயில், பஸ்கள் மூலம் இந்தக் குகைகளுக்குச் செல்லலாம். கிழக்குத் தொடர்ச்சி மலையில் சுமார் 100 கி.மீ. தூரம் கிட்டத்தட்ட 30 கணவாய்களைக் கடந்து பஸ்களும் ரயில்களும் சென்று வருகின்றன.