மம்தா-காங்கிரஸ் மோதல் வலுக்கிறது: லாபம் திமுகவுக்கு!
காங்கிரசிலிருந்து பிரிந்து சென்று திரிணமூல் காங்கிரஸை ஆரம்பிதத மம்தா பானர்ஜி, பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தார். பின்னர் அந்தக் கூட்டணியிலிருந்து விலகி தனித்துப் போட்டியிட்டு தோற்றார்.
இந் நிலையில் காங்கிரஸ் வேறு வழி இல்லாமல் இவருடன் கூட்டு சேர்ந்தது. இந்தக் கூட்டணி கடந்த மக்களவைத் தேர்தலில் இடதுசாரிகளை புரட்டிப் போட்டது.
இதையடுத்து அடுத்த ஆண்டு நடக்கும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலிலும் இணைந்து போட்டியிட இந்தக் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இந்த மாநிலத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் இடதுசாரிகளை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டியுள்ள காங்கிரஸ் மம்தாவிடம் வளைந்து நெளிந்து நடந்து வருகிறது.
ஆனாலும் மம்தாவின் பேச்சுக்களும் செயல்களும் அவ்வப்போது காங்கிரஸை வெறுப்பின் உச்சகட்டத்துக்கே கொண்டு சென்று வருகிறது.
கூட்டணியில் இருந்தால் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைப் போல மம்தாவும் பெரும் தொல்லை கொடுக்கும் ரகமாவார். ஆனால், அவரது கூட்டணி இல்லாவிட்டால் மேற்கு வங்கத்தில் மீண்டும் இடதுசாரிகள் வென்றுவிடுவர் என்பதால் பொறுமை காக்கிறது காங்கிரஸ்.
இந் நிலையில் அந்த மாநில உள்ளாட்சித் தேர்தலில் இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கும் முயற்சிகள் ஆரம்பத்திலேயே தோற்றுவிட்டன. இதையடுத்து காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. இதனால் காங்கிரசுக்கு தொடர்ந்து எச்சரி்க்கைகளை தந்தவண்ணம் உள்ளார் மம்தா.
மம்தா என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பதால், மத்தியில் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடாமல் தடுக்க காங்கிரஸ் தனது அரசியலைக் காட்ட ஆரம்பித்துள்ளது.
உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடிக் கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவுடன் காங்கிரஸ் பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளது. 21 எம்பி்க்களைக் கொண்ட முலாயமின் ஆதரவு இருந்தால் மம்தா தனது ஆதரவை வாபஸ் பெற்றாலும் பிரச்சனை வராது என்பது குறிப்பிடத்தக்கது.
முலாயமுடன் இருந்த அமர் சிங்குக்கும் சோனியா காந்திக்கும் எப்போதுமே ஆகாது. இப்போது அமர் சிங் அந்தக் கட்சியில் இல்லாததால் இரு கட்சிகளும் கைகோர்ப்பதில் சிக்கல் இல்லாத சூழல் நிலவுகிறது.
முலாயமுடன் நிதியமைச்சர் பிரணாப முகர்ஜி தான் இந்த 'பேக்-அப் பிளான்' குறித்து பேச்சு நடத்தி வருகிறார்.
இதன்மூலம் மம்தாவுக்கு அவரது பாணியிலேயே பதிலடி தந்துள்ளது காங்கிரஸ்.
இதன்மூலம், தான் ஆதரவை வாபஸ் பெற்றாலும் காங்கிரஸ் அரசுக்கு பிரச்சனை வராது என்பதையும் மம்தா உணர்ந்துள்ளார்.
மேலும் மேற்கு வங்கத்தில் தனித்து நின்றால் இடதுசாரிகளுக்கே லாபம் என்பதால் சட்டசபைத் தேர்தல் வரை காங்கிரசுடன் அட்ஜஸ்ட் செய்து கொண்டே ஆக வேண்டிய நிலைக்கு மம்தா தள்ளப்பட்டுள்ளார்.
ஆனாலும் எந்த நேரத்திலும் ஒருவர் முதுகில் ஒருவர் குத்த இரு கட்சிகளுமே தயார்.
காங்கிரசுக்கு அடுத்தபடியாக கூட்டணியில் பெரிய கட்சி மம்தா தான். இவரது நடவடிக்கைகளால் கூட்டணியின் அடுத்த பெரிய கட்சியான திமுகவுக்கு மத்திய அரசில் செல்வாக்கு அதிகரித்துள்ளது.