தனியார் பள்ளி கல்விக் கட்டணம்: அரசு உத்தரவு செல்லும்: சுப்ரீம் கோர்ட்
சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்விக் கட்டணம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தனியார் சுய நிதி பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதையடுத்து கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது.
இந்தக் குழு ஆய்வு நடத்தி ஒவ்வொரு பள்ளிக்கும் அதன் உள்கட்ட அமைப்பு, அமைவிடம், ஆசிரியர்- ஊழியர் ஊதியம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு பலவித கட்டணங்களை நிர்ணயித்தது.
அதிகபட்சமாக மேல்நிலை பள்ளிகளுக்கு ரூ.11,000மும், உயர்நிலை பள்ளிகளுக்கும் ரூ.9,000மும், நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.8,0000மும், ஆரம்பப் பள்ளிகளுக்கு நகர்புறத்தில் ரூ.5,000மும், கிராமப் பகுதிகளில் ரூ.3,500 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த கல்விக் கட்டண நிர்ணயத்துக்கு தனியார் பள்ளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதை எதிர்த்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், வேண்டுமானால் இதை கண்காணிக்கலாம் என்றும், கல்வி கட்டண ஒழுங்குமுறை சட்டத்தை இயற்றியது தவறு என்றும் அந்த சட்டம் செல்லுபடியாகாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் கூட்டமைப்பு கோரியிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சதாசிவம், எச்.எல். தத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் வேணு கோபால், ஹரிஷ் சால்வே, முகுல் ரஷ்டகி ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு கல்விக் கட்டணத்தை அரசு நிர்ணயிக்க முடியாது, அரசு. இதில் தலையிடவே முடியாது என்று அவர்கள் வாதிட்டனர்.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால், தீவிரமான, முழுமையான ஆய்வுக்குப் பி்ன்னர் தான் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தனியார் பள்ளிகளின் மனுவை தள்ளுபடி செய்தனர். கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
இந் நிலையில் இன்று சட்டசபையில் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப் பேரவைக்கு ஒரு இனிப்பான செய்தியை தெரிவிக்கிறேன்.
தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயித்தது. இந்த கட்டணத்திற்கு எதிராக ஒரு சில பள்ளி நிர்வாகத்தினர் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரணை நிலையிலேயே தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டம் நியாயமானது என்றும், இந்த சட்டம் மக்களுக்கு பயனளிக்கக்கூடியது என்றும் பாராட்டு தெரிவித்துள்ளனர் என்றார்.
இதையடுத்து வரும் கல்வியாண்டு முதல் இந்த கட்டுப்பாடான கட்டணம் அமலுக்கு வருகிறது. அதிக கட்டணம் வசூலித்தால் பள்ளிகளி்ன் அங்கீகாரம் ரத்தாகும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பள்ளிகளை திறக்க மாட்டோம்:
இந் நிலையில் தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டண ஆணையை வாபஸ் பெற கோரி நெல்லையில் வரும் மே 13ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த தனியார் பள்ளி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் 234 நர்சரி, பிரைமரி பள்ளிகள், 41 தனியார் உயர்நிலைப் பள்ளிகள், 86 மெட்ரிக் பள்ளிகள், 2 சிபிஎஸ்ஐ பள்ளிகள், ஒரு நடுநிலைப்பள்ளி என மொத்தம் 364 பள்ளிகளுக்கு அதன் கட்டமைப்பு வசதிகள் அடிப்படையில் கட்டண நிர்ணயித்து ஆணைகள் வநதுள்ளன. இந்த ஆணைகளை கல்வி துறை அதிகாரிகள் மூலம் விநியோகிக்கும் பணி பாளை சாரள் தக்கர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மேரி ஜேசி ரோச் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட தனியார் பள்ளிகளுக்கு ஆணைகளை முதன்மை கல்வி அலுவலர் வழங்கினார்.
சில பள்ளி நிர்வாகிகள் ஆணையை வாங்க மறுத்தனர். மேலும் சில பள்ளி நிர்வாகிகள் ஆணையில் தங்களது பள்ளிக்கேற்ற கட்டணம் நி்ர்ணயிக்கப்படவில்லை என்று முறையிட்டனர். சிறிது நேரத்தில் தனியார் பள்ளி நிர்வாகிகள் ஓன்றிணைந்து கட்டண நிர்ணய ஆணையை எதிர்த்து முற்றுகை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் சங்க மாவட்ட பொருளாளர் ஜெயேந்திரன், மாவட்ட செயலாளர் சுந்தரேசன், நர்சரி மற்றும் பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்க மாநில அமைப்பு செயலாளர் கல்யாண சுந்தரம் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது, அரசின் ஆணையை கண்டித்து வருகிற 13ம் தேதி முதன்மை கல்வி அலுவலகம் முன்பு அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தவும், மே 18ம் தேதி சென்னையில் மாநில மாநாடு நடத்தவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதே போல் பல பள்ளிகளில் அட்மிஷன் நடைபெறுகிறது.
எந்த மாணவருக்கும் டிசி தரவும் மாட்டோம். புதிதாக மாணவர்களை சேர்க்கவும் மாட்டோம் எனவும் அறிவித்துள்ளதால் மிகவும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரசின் கட்டண உயர்வு ஆணைக்கு எதிராக தனியார் பள்ளி நி்ர்வாகிகள் போர்கொடி தூக்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிகளையும் திறக்க மாட்டோம் என பள்ளி நிர்வாகிகள் கூறியுள்ளது கல்வி துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.