ஆட்சியில் பாதி நாள் எங்களுக்கு வேண்டும்- சிபு சோரன் திடீர் முட்டுக்கட்டை
ராஞ்சி: பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் பாதிநாட்கள் முதல்வர் பதவியை எங்களுக்குத் தர வேண்டும் என சிபுசோரன் திடீரென கூறியுள்ளதால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிபுசோரன் ஆட்சிக்கு ஆதரவு அளித்து வந்த பாரதீய ஜனதா ஆதவை வாபஸ் பெறுவதாக மிரட்டியது. இதையடுத்து இரு கட்சிகளுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்தது. அதில் சிபுசோரன் முதல்வர் பதவியில் இருந்து விலகுவது பாரதீய ஜனதா தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்பது என்று முடிவு ஆனது.
இதன்படி பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க ஏற்பாடுகளை செய்து வருகிறது. பாரதீய ஜனதாவில் யார் முதல்வர் என்பது இன்னும் முடிவாகவில்லை. பதவிக்கு பலர் போட்டி போடுவதால் இழுபறி நிலவுகிறது.
இந்த நிலையில் சிபுசோரன் பாரதீய ஜனதாவுக்கு புதிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார். இரு கட்சிகளும் ஆட்சி காலத்தை பாதி பாதியாக பகிர்ந்து கொள்ள வேண்டும். எஞ்சியுள்ள 56 மாதங்களில் இரு கட்சிகளும் தலா 28 மாதங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. அதில் இந்த முடிவை எடுத்துள்ளனர். இந்த நிபந்தனையை பாரதீய ஜனதா ஏற்குமா? இல்லையா? என்று தெரியவில்லை. எனவே ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இதுபற்றி சிபுசோரன் மகன் ஹேமந்த் சோரன் கூறும்போது, எங்கள் கோரிக்கையை பாரதீய ஜனதா ஏற்றுக் கொண்டால்தான் அடுத்த முடிவுகளை எடுக்க முடியும். பாரதீய ஜனதா ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த ஒருவரையே முதல்வராக தேர்வு செய்ய வேண்டும். அவர்கள் முதல்- மந்திரியை தேர்வு செய்த பின்னர் சிபுசோரன் ராஜினாமா செய்வார் என்றார்.
முண்டாவுக்கு வாய்ப்பு
தற்போதைய நிலவரப்படி அர்ஜூன் முண்டாவுக்கே முதல்வர் பதவி கிடைக்கும் எனத்தெரிகிறது. முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னாள் முதல்வர் அர்ஜுன் முண்டா, தற்போதைய துணை முதல்வர் ரகுவர்தாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா ஆகியோர் உள்ளனர்.
இதில் யஷ்வந்த் சின்காவுக்கே கட்சி மேலிடத்தில் அதிக ஆதரவு உள்ளது. ஆனால் எம்எல்ஏக்கள் மத்தியில் அர்ஜுன் முண்டாவுக்கு அதிக ஆதரவு உள்ளது.
2000ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டதில் இருந்தே பழங்குடியினத்தைச் சேர்ந்தவரே முதல்வராக இருந்து வந்துள்ளனர். இந்த மாநிலத்தில் 32 சதவீத மக்கள் பழங்குடியினர் ஆவர்.
எனவே தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவரே மீண்டும் முதல்வராக வேண்டும் என்று பழங்குடி சமூக எம்.எல்.ஏக்கள் வற்புறுத்தி வருகின்றனர். பாஜகவின் 18 எம்.எல்.ஏக்களில் 9 பேர் இந்த சமூகத்தினர் ஆவர். அவர்கள் அனைவரும் அர்ஜுன் முண்டாவையே ஆதரிக்கின்றனர்.
ஆனால், யஷ்வந்த் சின்கா பிராமணர். இவருக்கு பாஜக மேலிடத்தில் ஆதரவு இருந்தாலும் எம்எல்ஏக்களிடம் ஆதரவு இல்லை. இதனால் முதல்வர் தேர்வில் சிக்கல் நீடிக்கிறது. தற்போது ஆதி வாசி ஒருவரே முதல்வராக வேண்டும் என சிபு கட்சி கூறியுள்ளதால், முண்டாவுக்கே வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.