கொல்லத்தில் சாப்பிடக் கூட காசமில்லாமல் தவிக்கும் ஈழத் தமிழர்கள்
கொல்லத்தில் கடந்த 7ம் தேதி இரவு ஒரு பிரபல விடுதியில் தங்கியிருந்த 37 இலங்கை தமிழர்களை கேரள காவல்துறையினர் கண்டுபிடித்து அவர்கள் விடுதலை புலிகளா, என்றும் ஏன் கேரளா வந்தார்கள் என்றும் விசாரணை நடத்தினர். மத்திய பாதுகாப்பு பிரிவு, மாநில உளவு பிரிவு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு அதிகாரிகளும் நடத்திய விசாரணையில் இவர்களை கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுளுக்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்க டென்னீசன் என்பவர் அழைத்து வந்தது தெரிய வந்தது.
இதில் டென்னீசன்தான் முக்கிய குற்றவாளி என்பது தெரிய வந்ததால் அவரை கைது செய்தனர். மற்றவர்களை விடுவிக்க கேரள காவல்துறை முடிவு செய்து தமிழக காவல்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து நேற்று இரவு சென்னையில் இருந்து கியூ பிராஞ்ச் போலீசார் கொல்லம் சென்றனர்.
இன்று அவர்களை கேரள போலீசார் விடுவித்துவிட்டனர்.
முன்னதாக காவல்துறையின் விசாரணையில் இருந்த இவர்களுக்கு கொல்லம் இன்ஸ்பெக்டர் விஜயன் தனது சொந்த செலவில் நேற்று இரவு வரை சாப்பாடு வழங்கியுள்ளார்.
இன்று காலை முதல் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையுள்ள இலங்கை தமிழர்கள் சாப்பாட்டுக்கு வழியின்றியும், விடுதி கட்டணம் சுமார் ரூ.6 ஆயிரம் கட்ட முடியாமலும், கொல்லத்தில் இருந்து சென்னைக்கு செல்ல வாகன வசதியின்றியும் நிராயுதபாணியாக அவதிப்பட்டுக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கேரள மாநிலத்திலிருந்து இலங்கை தமிழர்களை ஏற்றுக் கொண்டு சென்னை செல்ல வாகன ஓட்டிகளும் தயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.