26 லட்சம் வாக்காளர்கள் புறக்கணித்ததால் நாங்கள் தோற்றோம் – ரனில் விக்கிரமசிங்கே
சென்னை: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் 26 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்காமல் தேர்தல் புறக்கணிப்பு செய்ததால்தான் எங்களது கூட்டணி தோல்வியைத் தழுவ நேரிட்டது என்று கூறியுள்ளார் இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரனில் விக்கிரமசிங்கே.
கொழும்பில் இருந்து டெல்லி செல்லும் வழியில் சென்னைக்கு நேற்று மாலை வந்தார் ரனில். அப்போது விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
டெல்லிக்கு தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டுள்ளேன். டெல்லியில் எனக்கு நண்பர்கள் இருக்கின்றனர். அவர்களை சந்தித்து பேசுவதற்காக வந்தேன்.
இலங்கையில் இருந்து 75 ஆயிரம் தமிழர்கள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கு குடி பெயர இருப்பது தொடர்பாக, ஆட்சியில் உள்ளவர்கள் தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மறு குடியமர்த்தல் குறித்து அரசு தெரிவிக்கவேண்டும்.
பிரபாகரனின் தாயாருக்கு தமிழகத்தில் சிகிச்சை பெற அனுமதித்து இருப்பது பற்றி கருத்து கூற விரும்பவில்லை. இலங்கையில் பிரபாகரனின் வீட்டை இடித்து தரைமட்டமாக்கியது தொடர்பாக எனக்கு எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
இலங்கை பாராளுமன்ற தேர்தலில் 26 லட்சம் மக்கள் வாக்களிக்காமல் புறக்கணித்து விட்டனர். மேலும், தேர்தலில் இயந்திர கோளாறும் ஏற்பட்டது. இதுபோன்ற, பல்வேறு குறைபாடுகள் காரணமாக நாங்கள் தோல்வியை சந்தித்தோம். நீதி, நேர்மை மற்றும் உண்மைக்கு கிடைத்த தோல்வியாகும்.
தற்போது தான், இலங்கையில் புதிய அரசு பொறுப்புக்கு வந்துள்ளது. பொருளாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் ஏராளமான திட்டங்களை எதிர் பார்க்கிறோம். வெளிநாடு, உள்நாடு கொள்கைகள், தொழில், கல்வி, வேலை வாய்ப்பு, உள்கட்டமைப்பு போன்றவற்றில் புதிய அரசின் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார் ரனில்.