சென்னையில் ரவுடிகள் அட்டூழியம்-கடைகள் சூறை- பெண்ணுக்கு கத்திக்குத்து
சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில் சரவணன் என்ற ரவுடியின் கூட்டாளிகள் இன்று நடத்திய வெறியாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், பல கடைகள் சூறையாடப்பட்டன. ஒரு பெண் கத்தியால் குத்தப்பட்டார்.
ரவுடிகளின் இந்த வெறிச் செயலால் பெரம்பூர் பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெரம்பூர் ஜி.டி. தோட்டத்தை சேர்ந்தவன் சரவணன். பிரபல ரவுடி. இவன் மீது கொலை முயற்சி, மாமூல் வசூல் செய்தல், அடி- தடி வழக்குகள் பல உள்ளன. இவனை கண்டால் அந்த பகுதி மக்கள் நடுங்குவர்.
நேற்று இரவு சரவணன் அந்த தெருவில் குடித்துவிட்டு சத்தம் போட்டு தகராறு செய்து கொண்டிருந்தான். அப்போது வேன் டிரைவரான ஹயத்பாட்சா (35) என்பவர் ரவுடித்தனம் செய்த சரவணனை தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன் பாட்சாவை அடித்து உதைத்துள்ளான்.
சையத்தும் விடவில்லை, ரவுடி சரவணனுடன் கடுமையாக மோதினார். இந்த நிலையில், சரவணன் வெட்டப்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து அவனுடைய கையாட்கள் பிரபா, கமலக் கண்ணன், விமல், சீனிவாசன், பிரபு, குமார் உள்பட 10 பேர் கும்பல் பட்டாக்கத்தி, மற்றும் உருட்டுக்கட்டைகளுடன் தெருவில் கூடினர். சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். சீட்களை கிழித்து எறிந்தனர்.
மேலும், மூடிய கடைகளை திறந்து அடித்து நொறுக்கினர். இதில் 10-க்கும் மேற்பட்ட கடைகள் சூறையாடப்பட்டது. மருந்து கடைகளையும் அடித்து நொறுக்கினர். இதில் கண்ணாடிகள் சிதறியது. கடையில் இருந்த சுபாஷினி என்ற பெண்ணையும் கத்தியால் வெட்டினர். இதில் அவர் காயம் அடைந்தார்.
இந்த தகவல் அறிந்து திரு.வி.க. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு), கருணாகரன், சப்- இன்ஸ்பெக்டர்கள் ஜெயபிரகாஷ் இந்திராணி தலைமையில் போலீஸ் படை விரைந்து வந்தது. போலீஸ் வருவதை கண்டதும் ரவுடி கும்பல் ஓட்டம் பிடித்தது.
ஆனாலும் விடாமல் துரத்திய போலீசார் பிரபா, கமலக்கண்ணன், விமல், சீனிவாசன் ஆகிய மூன்று ரவுடிகளை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பெரிய பட்டா கத்திகள், உருட்டுக்கட்டைகள் போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சரவணன் தலைமறைவாகி விட்டான்.இந்த ரவுடிக்கும்பல் அந்த பகுதியில் அட்டகாசம் செய்து வந்தனர். இவர்கள் அட்டகாசம் தாங்காமல் பலர் வீடுகளை காலி செய்து வேறு இடங்களுக்கு சென்று விட்டனர் என்று அப்பகுதி மக்கள் கூறினர்.
இவர்களது அட்டூழியம் தாங்காமல் நேற்று இரவே 150-க்கும் மேற்பட்ட மக்கள் திரு.வி.க.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய வந்தனர்.
ரவுடிக் கும்பலின் இந்த வன்முறை வெறியாட்டத்தால் அப்பகுதிமக்கள் பெரும் கொதிப்படைந்துள்ளனர்.