கொல்லத்தில் பிடிபட்ட ஈழத் தமிழர்கள் ராமேஸ்வரம் முகாமுக்கு அனுப்பப்படுகிறார்கள்
கொல்லம்: கொல்லம் வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டிருந்து பிடிபட்ட ஈழத் தமிழர்கள் ராமேஸவரம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
38 ஈழத் தமிழர்கள் சில நாட்களுக்கு முன்பு கொல்லத்தில் வைத்து பிடிபட்டனர். 5 பேர் பெண்கள். அனைவரையும் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப ஒரு டிராவல் ஏஜென்ட் வரச் சொன்னதாக விசாரணையில் தெரிய வந்தது.
இவர்களுக்குப் போலியான ஆவணங்கள் தயாரித்து இவர்கள் அனைவரையும் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை டென்னிஸ் என்கிற குமாரை கேரள போலீஸôர் கைது செய்தனர்.
இவரிடம் விசாரணை செய்ததில் இலங்கைத் தமிழர்களுக்கு வெளிநாடு செல்ல போலியான விசா உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்து அளித்தது தெரியவந்தது. 38 பேரில் சிலர் ராமேஸ்வரம் அகதிகள் முகாமிலிருந்து கொல்லம் வந்துள்ளனர். சிலர் விமானம் மூலம் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஆஸ்திரேலியா செல்வதற்காக லாட்ஜில் தங்கியிருந்தது தெரியவந்தது. பெண்கள் அனைவரையும் லாட்ஜிலேயே தங்கவைத்து விட்டு, ஆண்களிடம் மட்டும் போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்குப் பின்னர் டென்னிஸ் மட்டும் கைது செய்யப்பட்டார். கேரளாவைச் சேர்ந்த 5 பேருக்கு வலை வீசப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விசாரணைக்குப் பின்னர் அனைத்துத் தமிழர்களும் ராமேஸ்வரம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவர் எனத் தெரிகிறது.