புனலூர்-கொல்லம் ரயில் போக்குவரத்து - இ.அகமது தொடங்கி வைத்தார்
புனலூர் : புனலூர், கொல்லம் இடையிலான ரயில் போக்குவரத்தை ரயில்வே இணை அமைச்சர் இ. அகமது தொடங்கி வைத்தார்.
தமிழக-கேரள எல்லை பகுதியில், செங்கோட்டை-கொல்லம் இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதை 1904ம் ஆண்டு தொடங்கப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க இப்பாதையில் 300க்கும் மேற்பட்ட பாலங்கள், குகைகள், உள்ளன.
இப்பாதையை அகல ரயில் பாதையாக மாற்றிட 97-98ம் ஆண்டு நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு 2007 மே 1ம் தேதி முதல் கட்டமாக புனலூர்-கொல்லம் இடையே 45.2 கிமீ மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக அமைக்கும் பணி தொடங்கி கடந்த மாதம் நிறைவடைந்தது.
இதனை தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வுகள் முடிந்து அனைத்து பணிகளும் 90 சதவீதம் முடிவடைந்ததை தொடர்ந்து கொல்லத்தில் வைத்து புதிய தடத்தில் புதிய ரயிலை ரயில்வே இணை அமைச்சர் இ.அகமது கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் கேரள எதிர்கட்சி தலைவர் உம்மன் சண்டி, எம்பிக்கள் எம்எம் பேபி, குருதாசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய ரயில்வே இணை அமைச்சர் இ.அகமது பேசும்போது இன்னும் ஓரிரு மாதங்களில் செங்கோட்டை -புனலூர் இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கும் என்றார்.