நான்கு ஆண்டு பி.எட். படிப்பு: தமிழக அரசு பரிசீலனை
சென்னை: பிளஸ் டூ படிப்புக்குப் பின் படிக்கும் வகையில் நான்கு ஆண்டு பி.எட். படிப்பை கொண்டு வர தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.
சட்டப்சபையில் நடந்த விவாதத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், கல்வியைப் பெறுவது அடிப்படை உரிமை என்ற சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றும்போது, 8 லட்சம் ஆசிரியர்கள் தேவை என்றும், இதனால் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் எனவும் தெரிகிறது. தமிழகத்தில் ஆசிரியர் பற்றாக்குறையைச் சமாளிக்க அரசு எத்தகைய முயற்சி எடுத்து வருகிறது என்று கேட்டா.
இதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளின் எண்ணிக்கை 756 ஆக உள்ளது. இந்தப் பள்ளிகளில் படித்து ஆண்டுதோறும் வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை 1.13 லட்சம். அவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஆசிரியர் பட்டப் படிப்பு முடித்தவர்கள் அதிகளவு உள்ளனர். நடுநிலைப் பள்ளிகளில் கூட பி.எட். படிப்பு முடித்தவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, கல்வியைப் பெறுவதற்கான உரிமை என்ற சட்டம் அமலாகும்போது, தமிழகத்தில் தேவையான அளவுக்கு அதிகமாகவே ஆசிரியர்கள் இருப்பார்கள் என்றார்.
அப்போது, குறுக்கிட்ட உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, இப்போது பட்டப்படிப்பு முடித்ததும் ஓராண்டு பி.எட். படிப்பு நடைமுறையில் உள்ளது. இதனுடன், பிளஸ் டூ படிப்புக்குப் பிறகு நான்கு ஆண்டு பி.எட். படிப்பை அமல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார்.