பொதுப்பணித் துறையில் தினக்கூலி பணியாளர்கள் 746 பேர் நிரந்தரம்
தூத்துக்குடி: பொதுப்பணித் துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தினக்கூலி தொழிலாளர்கள் 746 பேரை பணி நிரந்தரம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக பொதுப்பணித்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலியாக வேலை பார்த்து வரும் 1056 பேரை கடந்த 2007ம் ஆண்டு நிரந்தரம் செய்து அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்தாண்டு சட்டசபையில் பொது பணித்துறையின் மானிய கோரிக்கையின் போது 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வரும் தகுதி வாய்ந்த தினக்கூலி பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவர் என அரசு அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் தினக்கூலியாக பணியாற்றி வந்தவர் பட்டியல் நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் (பொது) அலுவலகங்களில் இருந்து பெறப்பட்டது.
இதன் அடிப்படையில் 746 பணியாளர்களை பணி வரன்முறை செய்து அரசு முதன்மை செயலாளர் ராமசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். இந்த 746 பேருக்கும் உதவியாளர், பாசன உதவியாளர், உள்ளிட்டவைகளில் கல்வி தகுதி அடிப்படையில் பணிகள் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.