கலைஞர் வீட்டு வசதி திட்ட பயனாளிகளுக்கு ஐடி கார்டு- ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: தமிழக அரசின் கலைஞர் வீட்டு வசதி திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளும், அதற்கு ஸ்டாலின் அளித்த பதில்களும்...
ஜி.கே. மணி (பா.ம.க.): ராமநாதபுரம், கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடும் வறட்சி நீடிக்கிறது. இங்கு குடிநீர் வழங்க துணை முதல்வர் முதற்கட்டமாக நிதி ஒதுக்கி உள்ளார். இந்த நிதி போதாது என்கிறார்கள். அந்த மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்: பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஏற்கனவே முதல்வர் நிதி ஒதுக்கி உள்ளார். சில மாவட்டங்களில் இந்த நிதி போதாது. மேலும் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மூலம் கண்காணித்து அறிக்கை பெற்று கூடுதல் நிதி ஒதுக்கி குடிநீர் பிரச்சினை தீர்த்து வைக்கப்படும்.
ஜெயக்குமார் (அ.தி.மு.க.): திருவான்மியூர் மீனவர் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 350 மீனவ குடிசைகள் எரிந்து சாம்பலாகி விட்டன. கிராம பகுதியில் புதிய வீட்டு வசதி திட்டத்தின் மூலம் கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுப்பதுபோல் சென்னை போன்ற நகரங்களிலும் கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கப்படுமா?
மு.க. ஸ்டாலின்: கலைஞர் வீட்டு வசதி திட்டம் ஊரக பகுதிகளுக்கும் நடைமுறைபடுத்த வேண்டும் என உறுப்பினர் கோரிக்கை வைத்தார். அந்த திட்டத்தின் பெயர் கலைஞர் வீட்டு வசதி திட்டம்.
ஆனால் உறுப்பினர் கலைஞர் என்ற பெயரை சொல்லாமல் விட்டு விட்டு வீட்டு வசதி திட்டம் என்றார். பெயரை சொன்னால் பிரச்சினை வந்து விடும் என பெயரை விட்டிருப்பார்.
ஊரக பகுதிகளுக்குதான் இந்த திட்டம். மாநகர பகுதிகளில் குடிசையில் வாழ்பவர்களுக்கு மத்திய அரசின் ஜவகர்லால் நேரு தேசிய புணரமைப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது.
திருவான்மியூரில் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
சின்னப்பன் (அ.தி.மு.க.): நெல்லை அருகே உள்ள வைப்பாறு அணையில் இருந்து சுமார் 50 கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதில் சாக்கடை நீர் கலப்பதால் தொற்று நோய் ஏற்படுகிறது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
மு.க. ஸ்டாலின்: உறுப்பினரின் கோரிக்கைக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
பீட்டர் அல்போன்ஸ்: கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் யார், யாருக்கு வீடு வழங்கலாம் என்ற கணக்கெடுப்பு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் மொத்தம் கட்டப்பட வேண்டிய 28 லட்சம் வீடுகளில் பலர் வீடு கட்ட முடியாத பிரச்சினைக்குரிய இடங்களில் வசிக்கின்றனர்.
எனவே கிராமப்புறங்களில் கட்ட முடியாத மீதம் உள்ள வீடுகளை பேரூராட்சி பகுதியில் கட்ட அரசு நடவடிக்கை எடுக்குமா? கான்கிரீட் வீடு பெற தகுதி உள்ளவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுமா?
மு.க. ஸ்டாலின்: கலைஞர் வீட்டு வசதி திட்டத்துக்கு 90 சதவீத கணக்கெடுப்பு பணி முடிந்துள்ளது. இதில் கிராம பகுதியில் கட்ட முடியாமல் விடுபட்டு போன வீடுகளை பேரூராட்சி பகுதிகளில் கட்டும் வாய்ப்பு பற்றி பரிசீலிக்கப்படும். கான்கிரீட் வீடு பெறும் தகுதி உள்ளவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது பற்றியும் முதல்- அமைச்சருடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும். அவர்களுக்கு அடையாள அட்டை காத்திருக்கிறது என்றார்.