கருணாநிதி அளித்த விருந்துபசாரம் – அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்கள் புறக்கணிப்பு
சென்னை : சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைவதையொட்டி எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் கருணாநிதி விருந்தளித்துக் கெளரவித்தார். இதில் வழக்கம் போல அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கலந்து கொள்ளவில்லை.
சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடையும்போது எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் கருணாநிதி விருந்தளித்துக் கெளரவிப்பது வழக்கம்.
நடப்பு பட்ஜெட் கூட்டத் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் கருணாநிதி விருந்தளித்துக் கெளரவித்தார்.
இதில் சபாநாயகர் ஆவுடையப்பன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.ஜி.ஆர். கழக நிறுவனர் ஆர்.எம். வீரப்பன், கவிஞர் கனிமொழி, காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ், சுதர்சனம் உள்ளிட்டோர், பாமக சார்பில் ஜி.கே.மணி உள்ளிட்டோர், சிபிஐ சார்பில் சிவபுண்ணியம் உள்ளிட்டோர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ. ரவிக்குமார், தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, போலீஸ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஒரு மணி நேரம் நடந்த இந்த விருந்துபசார நிகழ்ச்சியில் வழக்கம் போல அதிமுக, மதிமுக, தேமுதிக கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் விருந்தைப் புறக்கணித்தது.