தமிழக சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ.40,000 கோடியாகும்-ஸ்டாலின்
சென்னையை அடுத்த காஞ்சீபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரில் தமிழ்நாடு மின்னணு நிறுவனமான எல்காட் சார்பில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப வளாக தொடக்க விழாவில் பேசிய ஸ்டாலின்,
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் சாப்ட்வேர் துறை மிகச் சிறப்பான பங்கை வகித்துக் கொண்டிருக்கிறது. வாகனங்கள் உற்பத்தி, எந்திர உதிரி பாகங்கள் உற்பத்தி, கம்யூட்டர் உதிரிபாக உற்பத்தி ஆகியவற்றில் தமிழ்நாடு சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது. சாப்ட்வேர் உற்பத்தியிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது.
இதனால், தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகிறார்கள். அன்னிய செலவாணி உயர்வதற்கும் தகவல் தொழில்நுட்பத்துறை துணை நிற்கிறது.
தமிழக அரசிடம் முறைப்படி ஒப்புதல் பெற்று 69 சிறப்பு பொருளாதார மண்டலங்களும், தனியார் சிறப்பு பொருளாதார மண்டலங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, ஓசூரிலும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைகின்றன.
தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் பணப் புழக்கம் அதிகரித்துள்ளது. அதனால், பொருளாதார மேம்பாடும் அடைந்து வருகிறது.
2008-2009ம் ஆண்டில் நாட்டின் சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ. 2,02,580 கோடியாகும். இதில், தமிழகத்தின் பங்கு மட்டும் ரூ. 36,680 கோடியாக இருந்தது.
2009-2010ம் ஆண்டு தமிழ்நாட்டில் சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ.40,000 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் சிறப்பான தொழில் கொள்கைதான் காரணம். தற்போது, அமைக்கப்பட்டு வரும் சிறப்பு பொருளாதார மண்டலம் பயன்பாட்டிற்கு வந்தால் 1 லட்சம் பேருக்கு நேரடி வேலையும், 2 லட்சம் பேருக்கு மறைமுக வேலைகளும் கிடைக்கும் என்றார்.