ஹைதராபாத் மர்ம துப்பாக்கிச் சூடு - இஸ்லாமிய அமைப்பு பொறுப்பேற்பு
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நேற்று மர்மமான முறையில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியது தாங்கள்தான் என்று இஸ்லாமிய அமைப்பு ஒன்று கூறியுள்ளது.
நேற்று மாலை பழைய ஹைதராபாத் பகுதியில் திடீரென 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் போலீஸ் சோதனைச் சாவடியில் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திலிருந்து ஒரு சிடியை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் உருதினால் எழுதப்பட்ட கடிதமும் கிடைத்துள்ளது. அதில், தெஹ்ரீக் கல்பா இ இஸ்லாம் என்ற பெயர் இடம் பெற்றுள்ளது. தாங்களே இதற்குக் காரண் என அந்த அமைப்பு கூறியுள்ளது.
2007ம் ஆண்டு மெக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்காக பழி வாங்க இந்த சம்பவத்தை நடத்தியதாக அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த சம்பவத்திற்கு சிமி காரணமாக இருக்கும் என கருதப்பட்டது. சிமி அமைப்பைச் சேர்ந்த சையத் விகருதீன் என்பவர்தான் இதற்குக் காரணம் எனவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் புதிய அமைப்பின் கடிதம் கிடைத்துள்ளது. இதன் நம்பகத்தன்மை குறித்து போலீஸார் ஆய்ந்து வருகின்றனர்.