கோவை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக கருணாகரன் நியமனம்
கோவை : கோவை அண்ணா பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக, சென்னை அண்ணா பல்கலைக் கழக நீர்வள மையத்தின் இயக்குனர் கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து ராஜ்பவன் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது
கோவை அண்ணா பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக, சென்னை அண்ணா பல்கலைக் கழக நீர்வள மையத்தின் இயக்குனர் கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பதவியேற்ற நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் துணைவேந்தர் பதவியை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், பாலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கருணாகரன் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இவரது பெற்றோர்கள் கிருஷ்ணசாமி - கோவிந்தம்மாளுக்கு மகனாக கடந்த 1950 ம் ஆண்டு பிப்ரவரி 25 ம் தேதி கருணாகரன் பிறந்தார். தனது கிராமத்தில் ஆரம்பக்கல்வி, பாலக்குறிச்சி புனித யாகப்பர் உயர் நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் புகுமுக வகுப்பு, கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் பி.இ.சிவில் இன்ஜினியரிங், கிண்டி பொறியியல் கல்லூரியில் எம்.இ. என படிப்பில் கொடி கட்டி பறந்தார்.
மேலும், அண்ணா பல்கலையில், ஏரி சீரமைப்பில் விவசாயிகளின் பங்கு குறித்து ஆய்வு செய்து பிஎச்.டி.பட்டமும் பெற்றார்.
கிண்டி பொறியியல் கல்லூரியில், கடந்த 34 ஆண்டுகளாக பேராசிரியராக பணிபுரிந்து வரும் இவர் சென்னை அண்ணா பல்கலைக் கழக நீர்வள மையத்தின் இயக்குனராக கடந்த 2004 ம் ஆண்டு ஜூலை 31 ம் தேதியிலில் பணியாற்றி வருகின்றார்.
அதே போன்று, பொதுவியல் பொறியியல் துறைத் தலைவராக கடந்த 2009 ம் ஆண்டு மே 18 ம் தேதியிலிருந்தும் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.