பட்ஜெட் கூட்டத் தொடரில் அதிக கேள்விகளுக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின்
சென்னை: கடந்த 36 நாட்களாக நடந்து வந்த தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்றுடன் முடிவடைந்து காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இந்தத் தொடரில் அதிக கேள்விகளுக்குப் பதிலளித்தவராக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவெடுத்துள்ளார்.
சட்டசபையில் நேற்று சபாநாயகர் ஆவுடையப்பன் ஆற்றிய நிறைவுரை:
13-வது சட்டப் பேரவையின் 12-வது கூட்டத்தொடர் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப் பேரவை மண்டபத்தில் 2010-ம் ஆண்டு ஜனவரி 6 முதல் 11 வரையிலும் நடைபெற்றது. புதிய சட்டப் பேரவைக் கட்டிடத்தில் இந்த 13-வது கூட்டத்தொடர் மார்ச் 19 தொடங்கி இன்று (14.5.2010) வரையிலும் 36 நாட்கள் நடைபெற்றது.
அமைச்சர்களில், சட்டப்பேரவையில் அதிக நேரம் உரையாற்றியவர் துணை முதல்வர் என்பதை இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன்.
கேள்வி கேட்டவர்களில் காங். முதலிடம்
கடந்த ஆண்டு 21.7.2009 அன்று அறிவிக்கப்பெற்ற பின்னர் 13.5.2010 வரை உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட மொத்த வினாக்கள்-22,973, வினாக்களைக் கொடுத்தவர்களில் முதல் ஐந்து நிலைகளில் இருப்பவர்கள் கோவை தங்கம் (காங்கிரஸ்) - 5,335, ம.குணசேகரன் (அ.தி.மு.க.) - 3,122 டாக்டர் கே.காயத்ரி தேவி (காங்கிரஸ்) - 2,578 டி.ஜெயக்குமார் - (அ.தி.மு.க.) - 2,107 கி.ஆறுமுகம் (பா.ம.க.) - 1,651.
அதிக வினாக்களுக்கு விடையளித்துள்ள அமைச்சர்கள்: அமைச்சர்கள் நேரு, தங்கம் தென்னரசு - தலா 19, வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன் - தலா 14, பெரியகருப்பன், மு.பெ.சாமிநாதன் - தலா 11, பொங்கலூர் பழனிச்சாமி, சுரேஷ்ராஜன், சாத்தூர் ராமச்சந்திரன், செல்வராஜ் - தலா 10, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - 9.
ஆப்சென்ட் ஆகாத 44 பேர்
இரு கூட்டத்தொடரிலும் அனைத்து நாட்களும் பேரவைக்கு வருகை புரிந்த உறுப்பினர்கள் 44 பேர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து முடிவு செய்கின்ற ஜனநாயக நடைமுறையைப் பின்பற்றி அனைவருக்கும் எடுத்துக்காட்டாக திகழும் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் அவையின் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
பேரவை நிகழ்ச்சிகள் சிறப்புற நிறைவேற உறுதுணையாக இருந்த அனைவருக்கும் உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பேரவை இத்துடன் அடுத்து கூடும் நாள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது என்றார் சபாநாயகர்.