ஜார்க்கண்ட் புதிய முதல்வராக அர்ஜூன் முண்டா தேர்வு
டெல்லி: ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவிக்கு அர்ஜூன் முண்டாவை பாஜக தேர்வு செய்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க சிபு சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அங்கு ஆட்சியமைக்கும் வேலைகளில் பாஜக தீவிரமாகியுள்ளது.
முதல் கட்டமாக முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கின. முன்னாள் முதல்வர் அர்ஜூன் முண்டா, முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, துணை முதல்வர் ரகுவர் தாஸ் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
பழங்குடியினத்தவரையே முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யவேணடும் என பாஜகவைச் சேர்ந்த பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து அர்ஜூன் முண்டாவையே முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கும்
நிலைக்கு பாஜக தள்ளப்பட்டது.
இதையடுத்து தற்போது முண்டாவையே முதல்வராக்க பாஜக தீர்மானித்துள்ளது. நேற்றே இந்த அறிவிப்பு வெளியிடப்படவிருந்தது. ஆனால் முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத் மரணமடைந்ததால் அந்த அறிவிப்பை பாஜக தள்ளிப் போட்டு விட்டது.
நாளை ஷெகாவத் இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. அதன் பின்னர் முண்டா தேர்வு செய்யப்பட்ட தகவலை பாஜக தலைமை முறைப்படி வெளியிடும் எனத் தெரிகிறது.