இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களின் வாரிசுகள் 90 பேருக்கு லேப்டாப்- ஸ்டாலின் வழங்கினார்
சென்னை: இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் ஊழியர்களின் வாரிசுகள் 90 பேருக்கு பிளஸ்டூவில் அதிக மதிப் பெண் பெற்றதைப் பாராட்டி லேப்டாப் கணினிகளை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடந்த ஆண்டு நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன், "மேல்நிலை பள்ளித்தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயிலும் திருக்கோவில் பணியாளர்களின் மகன் அல்லது மகளுக்கு, அவர்கள் பிளஸ்-2 தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில், முதல் 100 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும்'' என்றும், "அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் தொழில் சார்ந்த பட்டப்படிப்பு பயிலும் திருக்கோவில் பணியாளர்களின் மகன் அல்லது மகளுக்கு முதலாண்டு கல்விக் கட்டணத்தில் 25 சதவிகித தொகை நிதியுதவியாக வழங்கப்படும்'' என்றும் அறிவித்தார்.
இதன்படி பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 90 மாணவர்களுக்கு மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்பில் மடிக்கணினிகளும், மூன்று மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு கல்வி கட்டணத்தில் 25 சதவிகித தொகையாக ரூ.5,325 நிதியுதவியும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தமிழ் வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் க.முத்துசாமி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் ப.ரா.சம்பத் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.