கல்விக் கட்டண நிர்ணயத்தை எதிர்த்து பள்ளிகளை மூடும் போராட்டம் வாபஸ்
சென்னை: தமிழக அரசு நிர்ணயித்த கல்விக் கட்டண விகிதத்தை எதிர்த்து ஜூன் 2ம் தேதி பள்ளிளைத் திறப்பதில்லை என்ற போராட்டத்தை தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் சங்க கூட்டமைப்பு வாபஸ் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள தனியார் சுயநிதி பள்ளிகளில் அதிகபட்ச கல்விக்கட்டணமாக 11 ஆயிரம் ரூபாய் என்று தமிழக அரசு நியமித்த நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்தது. இதை எதிர்த்து பள்ளிக்கூடங்களின் நிர்வாகிகள் கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணம் செல்லும், தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணத்தை நிர்ணயிப்பதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று தீர்ப்பளித்தது.
இதையடுத்து போராட்டத்தில் குதித்த தனியார் பள்ளி நிர்வாகங்கள், பள்ளிக் ட்டணத்தை உயர்த்தும் வரை பள்ளிகளை திறக்கப்போவதில்லை, ஜுன் 2-ந் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படாது என்று அறிவித்தன.
இந்த நிலையில், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகளின் சங்க கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றி, கூட்டமைப்பு தலைவர் டி.கிறிஸ்துதாஸ் கூறுகையில்,
எங்கள் கூட்டமைப்பில் 27 சங்கங்கள் இடம்பெற்றுள்ளன. கல்விக்கட்டணம் தொடர்பாக பள்ளிக்கூடங்களை ஜுன் மாதம் 2-ந் தேதி மூடப்போவதாக பல்வேறு பள்ளிகள் அறிவித்து உள்ளன. நம் கோரிக்கைகளை, குறிப்பாக, தனியார் சுயநிதி பள்ளிக்கூடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டண விகிதத்தை உயர்த்தவேண்டும் என்று நீதிபதி கோவிந்தராஜன் குழுவிடம் மேல்முறையீடு செய்வதுதான் வழி.
கடந்த 2002-ம் ஆண்டு சிட்டிபாபு கமிட்டி எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு நகரப்பகுதிகளுக்கு ரூ.3400 என்று கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்தது. 7 ஆண்டுகள் முடிந்துவிட்டது. இப்போதுள்ள நிலையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. பள்ளிக்கூடங்களின் நிர்வாக செலவு பல மடங்கு அதிகரித்துவிட்டது. இப்போதைய நிலையில் கல்விக்கட்டணத்தை 3 மடங்கு உயர்த்தவேண்டியது உள்ளது.
எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு 8 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்த ண்டிய நிலை உள்ளது. பிளஸ்-1, பிளஸ்-2 படிப்புக்கு 2002-ம் ஆண்டில் ரூ.7200 நிர்ணயிக்கப்பட்டது. இன்றைய நிலையில் 20 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனவே, தனியார் சுயநிதி பள்ளிக்கூடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண விகிதத்தை உயர்த்தவேண்டும் என்று நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியிடம் மேல் முறையீடு செய்வதுதான் வழி.
கட்டண நிர்ணயம் தொடர்பாக, பள்ளிக்கூடங்கள் மூடுவது, ஸ்டிரைக் செய்வது என்பது உள்ளிட்ட எவ்வித போராட்டங்களிலும் ஈடுபடவேண்டாம். ஜுன் 2-ந் தேதி அனைத்து சுயநிதி தனியார் பள்ளிக்கூடங்களும் இயங்கும்.
நாம் நடத்துவது தொழிற்சங்கமோ, தொழிற்கூடமோ அல்ல. வருங்கால சிற்பிகளை உருவாக்கும் கல்விக்கூடங்களை நடத்துகிறோம். நாட்டுக்கு நல்ல குடிமக்களை உருவாக்கும் பொறுப்பை ஏற்றுள்ளோம். எனவே, குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் பள்ளிக்கூடங்களை மூடக்கூடாது.
நம் கோரிக்கைகள் தொடர்பாக, முதல்வர் கருணாநிதி நல்லதொரு சுமூகமான முடிவு எடுப்பார் என்று நம்புவோம் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றார்.