சென்னை: மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டியின்போது மது பாரில் ரகளை செய்த ஆறு வீரர்களிடம் விளக்கம் கேட்டு இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று நோட்டீஸ் அனுப்பியது.டுவென்டி 20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று படு தோல்வியடைந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி கடும் விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. குறிப்பாக கேப்டன் டோணி மீது அனைவரும் பாய்ந்து குதறிக் கொண்டிருக்கிறார்கள்.இந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் சிலர் ரசிகர்களுடன் அடிதடி, கலாட்டாவில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பைக் கூட்டியது.இந்தப் பின்னணியில் உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் மேலாளராக செயல்பட்ட ரஞ்சிப் பிஸ்வால் கிரிக்கெட் வாரியத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அதில் வீரர்களின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து விளக்கியுள்ளார். மது பாரில் இந்திய வீரர்கள் செய்த ரகளை குறித்தும் அதில் விலாவாரியாக கூறியுள்ளார்.இதுகுறித்து நேற்று கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தியது. அதன் பின்னர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள யுவராஜ் சிங், ஆசிஷ் நெஹ்ரா, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ஜாகிர் கான், பியூஷ் சாவ்லா ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.முதலில் ஆறு பேரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று அனைவருக்கும் கிரிக்கெட் வாரிய செயலாளர் சீனிவாசன் நோட்டீஸ் அனுப்பினார்.இந்த ஆறு பேரில் யுவராஜ் சிங், நெஹ்ரா, சர்மா, ஜடேஜா ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் பாயவுள்ளது. பிட்னஸ் இல்லாத காரணத்தால் இவர்களை அணியிலிருந்து நீக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாம்.இந்த நான்கு பேரும் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசியா கோப்பைக்கான அணியில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிகிறது.யுவராஜ் சிங், ரோஹித் சர்மா ஆகியோர் உடல் தகுதியுடன் இல்லை. இவர்களை அணியிலிருந்து நீக்கியாக வேண்டும் என இந்திய அணியின் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் ஏற்கனவே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #13;