For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் - அகதிகள் முகாம்களில் தீவிர கண்காணிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் கடந்த ஆண்டு இதே தினத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதன் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மண்டபம் அகதிகள் முகாம் உள்பட அனைத்து முகாம்களிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே, இலங்கை அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இங்கு 1,080 குடும்பங்களை சேர்ந்த 3,872 பேர் வசிக்கின்றனர்.

கடந்த ஆண்டு மாவீரர் நாளன்று அஙகுள்ள ஆலமர உச்சியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடி ஏற்றப்பட்டிருந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நான்கு பேர் மீது, கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்தனர்.

இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தின்போது, மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமலிருக்க, மேற்கண்ட நபர்களில் மூவரை குடும்பத்துடன், வெவ்வேறு முகாம்களில் மாற்றம் செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள நான்காவது நபரின் பதிவு ரத்து செய்யப்பட்டது.

கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில், இரண்டு தினங்களாக போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 'கியூ' பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். முகாமில் பதிவு பெறாதவர்கள் யாரேனும் இருக்கின்றனரா என்று போலீசார் சோதனையிட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் சந்தேகப்படும்படி ஆள் நடமாட்டம் இருந்தால், தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

முத்துக்குமார்.. திருமாவளவன் எழுதிய பாடல்:

இந் நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் முத்துக்குமார் பாசறை இன்று தொடங்கப்படுகிறது. இதேபோல முத்துக்குமார் குறித்து திருமாவளவன் எழுதிய பாடலையும் இன்று அக்கட்சி வெளியிடுகிறது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் வன்னி அரசு விடுத்துள்ள அறிக்கை:

தமிழீழத்தில் அப்பாவித் தமிழர்கள் மீதான இனவெறியாட்டத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமார் பெயரில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் கரும்புலி முத்துக்குமார் பாசறை தொடங்கும் நிகழ்வு இன்று (18.05.2010) மாலை 5 அணி அளவில், சென்னை சேப்பாக்கம், தொலைக்காட்சி நிலையம் எதிரிலுள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்குகிறார். இந்நிகழ்ச்சியில் கரும்புலி முத்துக்குமார் பற்றி திருமாவளவன் எழுதி, பாடிய பாடல்கள் அடங்கிய ஒலிப்பேழையும், கரும்புலி முத்துக்குமார் உயிர் மூட்டி தீ கொடுத்தவன் எனும் நூலம் வெளியிடப்படுகின்றன என்று கூறியுள்ளார்.

இலங்கையை நோக்கி பயணம்-புதிய தமிழகம்:

இந் நிலையில் மத்திய அரசின் நடவடிக்கையின் அடிப்படையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் இளைஞர்கள் இலங்கையை நோக்கி பயணம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இலங்கையில் கடந்த ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் அந்நாட்டு அரசுக்கும் நடந்த போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு இன்று மாலை புதிய தமிழகம் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.

மேலும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை முள்வேலி முகாம்களில் இலங்கை அரசு அடைத்து வைத்திருந்தது. மத்திய அரசின் உதவியால் சுமார் ஒன்றரை லட்சம் பேர் மீட்கப்பட்டு, மறுகுடியமர்வு செய்யப்பட்டனர். இதில் எஞ்சியுள்ள தமிழர்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு சுய அதிகாரம் கிடைக்கவும் இந்திய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து இம்மாதத்திற்குள் வலியுறுத்த உள்ளோம்.

இலங்கையில் உள்ள தமிழர்களின் கல்லறைகள் அழிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. இதை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். இலங்கை தமிழர் பிரச்சனையில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.

மத்திய அரசின் நடவடிக்கையின் அடிப்படையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் இளைஞர்கள் இலங்கையை நோக்கி பயணம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X