மேலவைக்கு சிறப்பு அதிகாரி நியமனம்-தமிழக அரசுடன் நரேஷ்குப்தா மோதல்
தமிழகத்தில் சட்டமேலவை அமைக்கும் பணிகளை ஒருங்கிணைக்க சிறப்பு அலுவலர் பதவியை தமிழக அரசு உருவாக்கி, அதில் சட்டமன்ற இணைச் செயலாளர் ஜமாலுதீனை நியமித்தது.
இவர் மேலவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான பணிகள், விகிதாச்சார பிரதிநிதித்துவ கோட்பாட்டுப்படி தேர்தல் நடத்துவது, பொது (தேர்தல்) துறையுடன், ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வது ஆகிய பணிகளைச் செய்வார் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு உதவியாக சட்டப்பேரவை செயலகத்தில் உள்ள சில அதிகாரிகள் நியமிக்கடவுள்ளனர்.
இந் நிலையில், இந்த சிறப்பு அதிகாரியை, தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசிக்காமல் தமிழக அரசு நியமித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா புகார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு ஒரு கடிதத்தையும் அவர் எழுதியுள்ளார். இது தொடர்பாக குப்தா கூறுகையில்,
தமிழக சட்டமன்ற மேலவைப் பணிகள் தொடர்பாக சிறப்புப் பணி அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது பற்றி எனக்கு தாமதமாகத்தான் தெரியவந்தது. இவ்வாறு சிறப்பு அதிகாரி நியமிக்கப்படுவது பற்றி தேர்தல் ஆணையத்தோடு கலந்தாலோசிக்கப்பட்டிருக்க வேண்டும்.
மேலவை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்வது மற்றும் தேர்தல் நடத்துவது போன்றவை, இந்திய தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாகும். இதில், தேர்தல் ஆணையத்துக்கு, மாநில பொது (தேர்தல்) துறை அல்லது தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் உதவிகரமாக இருக்கும்.
ஆனால், தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசிக்காமல், சிறப்புப் பணி அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார். இது பற்றிய விவரங்களை குறிப்பிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். இது பற்றி தமிழக சட்டமன்ற செயலாளருக்கும் தகவல் அனுப்பியிருக்கிறேன் என்றார்.
சட்டசபை செயலாளருக்கு குப்தா அனுப்பியுள்ள தகவலில், தேர்தல் ஆணையத்தை கலந்தாலோசிக்காமல் சிறப்பு அதிகாரியை நியமித்திருக்கக்கூடாது. இது, தேர்தல் ஆணையத்தின் பணிகளில் தலையிடுவது போன்றதாகும் என்று கூறப்பட்டுள்ளது.
ஹைதராபாத் மேலவையை பார்வையிடும் தமிழக அதிகாரி:
இந் நிலையில் தமிழகத்தில் 26 ஆண்டுகளுக்கு பின் மேலவை அமைவதால் அதன் நடைமுறைகளை முழுவதுமாக அறிந்து கொள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கூடுதல் செயலாளர் அந்தஸ்தில் உள்ள சந்தானகிருஷ்ணன் ஆந்திரா செல்கிறார்.