திடீரென அங்கும் இங்கும் ஓடும் அப்சல் குரு 'பைல்'!
அப்சல் குருவின் கருணை மனுவை 2006ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லி அரசின் ஆய்வுக்கு அனுப்பி வைத்திருந்தது.
ஆனால், 4 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த மனு மீது டெல்லி அரசு சமீபத்தில் திடீரென முடிவெடுத்து மாநில துணை நிலை ஆளுநர் திஜேந்தர் கன்னாவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.
அதில் அப்சல் குருவை தூக்கில் போடலாம் என டெல்லி மாநில முதல்வர் ஷீலா தீட்சித் பரிந்துரைத்திருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், அதை தீட்சித் மறுத்தார்.
இந் நிலையில் மாநில அரசு அனுப்பிய கோப்பை ஆளுநர் கன்னா மாநில அரசுக்கே நேற்று திருப்பி அனுப்பினார். அதில், குருவை தூக்கில் போடுவதை ஆதரிக்கிறீர்களா இல்லையா என்பதைத் தெளிவாக விளக்குமாறு அதில் ஆளுநர் கேட்டிருந்தார்.
இதன்மூலம் தெளிவான பரிந்துரை ஏதும் இல்லாமல், இந்தக் கோப்பு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது தெரிகிறது.
இந் நிலையில் இந்த கோப்பை இன்று மாநில அரசு கவர்னருக்கே திருப்பி அனுப்பியுள்ளது. அதில் ஆளுநர் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதில் தந்துள்ளதாகத் தெரிகிறது மாநில அரசு தெரிவித்துள்ளது.
மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாபை தூக்கிலிட வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கை பலமாக எழுந்துள்ள நிலையில், முதலில் அப்சல் குருவின் கருணை மனு விவகாரத்துக்கு முடிவு கட்ட வேண்டிய நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் குருவை தூக்கிலிட்டால், காஷ்மீர் விவகாரத்தில் அது எதிரொலிக்கும் என்றும், இப்போது மீண்டும் தொடங்கியுள்ள இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு அது இடையூறாக அமையும் என்றும் மத்திய அரசு அஞ்சுவதாகத் தெரிகிறது.
இந் நிலையில் அப்சல் குருவின் மனு தொடர்பாக கோப்பு திடீரென அங்கும் இங்குமாக ஓட ஆரம்பித்துள்ளது.