For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பால் உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக் திடீர் நிறுத்தம்-அரசு மிரட்டுவதாக புகார்!

Google Oneindia Tamil News

சென்னை: கடந்த 3 நாட்களாக பால் உற்பத்தியாளர்கள் நடத்தி வந்த வேலைநிறுத்தப் போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரை விட்டு அரசு மிரட்டுவதால் ஸ்டிரைக் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் அறிவத்துள்ளது.

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.​ 5 முதல்​ உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.​ இதற்கு ஆதரவாக தமிழ்நாடு பால் முகவர்கள் நலச் சங்கம் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அறிவித்தன.​

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பால் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் தீவிரம் அடைந்ததால், பால் கொள்முதல் செய்து, சென்னை ஆவினுக்கு அனுப்பப்படுவது பாதிக்கப்பட்டது.

ஆனால், இதை ஆவின் நிறுவன அதிகாரிகள் மறுத்தனர். அவர்கள் கூறுகையில், தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மூலம் பால் விநியோகம் சீராக நடைபெறுகிறது. பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தால் இதுவரை எந்தவித பாதிப்பும் இல்லை.​

சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் பால் தேவையை ஈடுகட்டவும்,​ தட்டுப்பாடு ஏற்படாமல் வருமுன் காக்கும் வகையிலும் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.​

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 1.9.2009ல் தான் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ.15.54 எனவும், ​எருமைப் பாலுக்கு ரூ.​ 23 எனவும் பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தியது.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ஒரு லிட்டர் எருமைப்பாலுக்கு ரூ.​ 10.50ம்,​​ பசும்பாலுக்கு ரூ.5.50ம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுதவிர ஆவின் நிறுவனத்திடம் தினமும் உபரியாகும் 3 லட்சம் லிட்டர் பால், ஈரோடு, சேலம், தருமபுரி, மதுரை ஆகிய ஆவின் பால் பண்ணைகளுக்கு அனுப்பப்பட்டு, இதர பால் பொருள்களைத் தயாரிக்கும் வகையில் பால் பவுடராக மாற்றப்பட்டு, போதிய ​அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.​ இந்த பால் பவுடர் மூலம் தேவையான அளவு பால் உற்பத்தி செய்ய முடியும்.​ எனவே, ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தூண்டுதல்-அமைச்சர்:

இந் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூண்டுதலின் காரணமாகவே பால் உற்பத்தியாளர்கள் தேவையற்ற போராட்டத்தை நடத்தி வருகிறார்கள் என்று பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், பால் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை காரணமாக காட்டி 17ம் தேதி முதல் பால் நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தை அவர்கள் நடத்துவதில் எந்தவித நியாயமும் இல்லை என்பதற்கு அரசு தனது விளக்கத்தை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறது.

2001 முதல் 2006ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் பால் கொள்முதல் விலை இரண்டு தவணையாக உயர்த்தப்பட்டது. ஆனால் 2006ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு இதுவரை மூன்று முறை பால் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளது.

மேலும் கடந்த 13ம் தேதி பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அனைத்து கோரிக்கைகளும் உரிய நேரத்தில் பரிசீலிக்கப்படும் என்று கூறி போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டேன். இதைத் தொடர்ந்து அரசின் நிலைப்பாட்டை தெரிவித்தும் நிர்வாகிகளுக்கு 14ம் தேதி கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூண்டுதலின் காரணமாக இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டம் காரணமாகசென்னையிலோ அல்லது மாவட்டங்களிலோ பால் விநியோகத்தில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.

இந் நிலையில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரை விட்டு அரசு மிரட்டுவதால் ஸ்டிரைக் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்க மாநிலத் தலைவர் செங்கூட்டுவன் அறிவத்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X