For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆந்திராவில் கரையை கடந்தது லைலா.. ஆனால், மீண்டும் வரும்!

Google Oneindia Tamil News

Satellite View
டெல்லி & குண்டூர்: தமிழகம், ஆந்திரா, ஒரிஸ்ஸா மாநிலங்களை அச்சுறுத்தி வந்த லைலா புயல் இன்று மாலை 4 மணிக்கு ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பபட்லா அருகே கரையைக் கடந்தது.

ஆனால், இந்தப் புயல் மீண்டும் வலுவடைந்து புதிய பலத்துடன் திரும்பி வர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அவ்வாறு திரும்பி வரும்போது சேதம் அதிகரிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை ஆந்திராவில் புயல் கரையைக் கடந்தபோது அந்தப் பகுதியில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் மிக பலத்த சூறாவளி்க் காற்று வீசியது.

மேலும் குண்டூர், நெல்லூ், விசாகப்பட்டிணம், கிருஷ்ணா, ஓங்கோல் ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழை கொட்டி வருகிறது. இந்த மழை அடுத்த 12 மணி நேரத்துக்குத் தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

புயல் வலுவிழந்த நிலையில் கரையைக் கடந்ததால் அதிக சேதம் ஏற்படவில்லை. அதே நேரத்தில் கரையைக் கடந்தபோது கடலில் 6 அடி உயரத்துக்கு அலைகள் எழும்பின. கடற்கரைப் பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் 1.5 முதல் 2 மீட்டர் அளவிலான கடல் அலைகள் புகுந்து அந்தப் பகுதியை வெள்ளக்காடாக்கியுள்ளன.

முன்னதாக புயல் கரையைக் கடப்பதால் கடலோரத்தில் வசிக்கும் கிட்டத்தட்ட 11 லட்சம் மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர். 50,000 மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், புயல் வலுவிழந்த நிலையில் கரையைக் கடந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் கடும் மழைக்கு இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். நெல்லூர் மாவட்டத்தில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

புயல் காரணமாக ஹைதராபாத்திலிருந்து விசாகப்பட்டனம், ராஜமுந்திரிக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. விஜயவாடா, விசாகப்பட்டனம் வழியாக செல்லும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டன.


புயல் உதவி கோரிக்கைகளுக்கு கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஹைதராபாத் -040-23239922, 040-23239900.

விஜயவாடா - 0866-2767295, 0866-2767077, 0866-2767078

புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளித்து மீட்பு நடவடிக்கைளை மேற்கொள்ள மத்திய தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் 438 பேர் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விசாகப்பட்டனம், விஜயவாடா, மசிலிப்பட்டணம், குண்டூர், பிரகாசம், நெல்லூர் ஆகிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்திலும் உஷார் நிலை:

புயலால் ஆந்திராவுக்கு ஆபத்து இருந்தாலும் தமிழக கடலோரப் பகுதிகளிலும் உஷார் நிலையில் அதிகாரிகள் உள்ளனர்.

நாகை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம் ஆகிய மாவட்ட கடலோரப் பகுதிகளில் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

திரும்பி வரும் லைலா புயல்:

இந் நிலையில் ஆந்திராவில் கரையைக் கடந்த லைலா புயல் மீண்டும் வலுவடைந்து புதிய பலத்துடன் திரும்பி வர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஜெனரல் அஜித் தியாகி தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், பாபட்லாவில் கரையைக் கடந்த புயல் ஆந்திரக் கரையோரமாகவே நகர்ந்து வருகிறது. இந்த புயல் சின்னத்தின் மேல் மட்டத்தில் 10 கி.மீ. உயரததில் மிக பலத்த சுழல் காற்று நிலவுகிறது.

இது புயலை வடக்கு, வட மேற்கு திசை நோக்கி நகர்த்தி வருகிறது. இதனால் இந்தப் புயல் ஒரிஸ்ஸா-வஙகதேசம் நோக்கி நகர்ந்து சில நாட்களில் மீண்டும் வங்கக் கடலில் நுழைந்து மீண்டும் புதிய வலுவான புயலாக உருவெடுக்கலாம்.

அவ்வாறு இந்தப் புயல் மீண்டும் உருவாகும்போது அதன் பலம் மேலும் அதிகமாக இருக்கும், அது விளைவிக்கும் சேதமும் அதிகமாக இருக்கும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X