துபாயில் வீடு தேடும் சானியா- சோயப் மாலிக்!
ஹைதராபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்து இல்லறத்திற்குள் நுழைந்துள்ள டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, குடித்தனத்தைத் தொடங்குதவற்காக துபாயில் வீடு பார்த்து வருகிறாராம்.
இதுகுறித்து சானியா கூறுகையில், எனக்கு துபாயை மிகவும் பிடிக்கும். எனக்கு அது இன்னொரு வீடு போல. இப்போது நல்லதாக ஒரு வீடு பார்த்து வருகிறோம். எங்களது தொழில் நிமித்தம் இங்கிலாந்துக்குச் செல்வதற்கு முன்பே வீட்டைப் பார்த்து முடித்து விட தீவிரமாக உள்ளோம்.
எனது கையில் ஏற்பட்ட காயம் தற்போது வலியைக் கொடுக்கவில்லை. சரியாகி வருகிறது. எனது பயிற்சி திட்டமிட்டபடி நடந்து வருகிறது.
துபாயில் செட்டிலாவது என்பது எங்கள் இருவருக்குமே வசதியானது, செளகரியமானது. மீடியா வெளிச்சத்திலிருந்து தப்ப இது உதவும்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் செட்டிலாவீர்களா என்றுகேட்டிருந்தால் நிச்சயம் மாட்டேன் என்றுதான் கூறியிருப்பேன். ஆனால் இப்போது எல்லாமே மாறிப் போய்விட்டது. துபாய்தான் எங்கள் இருவருக்கும் சரிப்பட்டு வரும்.
இங்கு இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்த நிறையப் பேர் வசித்து வருகின்றனர். எனவே சொந்த ஊரில் இருப்பதைப் போலவே உணர முடியும்.
மேலும் உலகின் எந்தப் பகுதிக்கும் இங்கிருந்து எளிதில் போக விமான வசதி உண்டு.
திருமணத்திற்குப் பிறகும் டென்னிஸ் ஆட முடியுமா என்ற கேள்வியே தவறு. எத்தனை தாய்மார்கள் டென்னிஸ் ஆடுகிறார்கள் என்று தெரிய வந்தால் ஆச்சரியப்படுவீர்கள். நிறையப் பேருக்கு அது தெரியவே தெரியாது என்றார் சானியா.
திருமணத்திற்குப் பிறகு பிரிமிங்காமில் நடைபெறும் தொடரில் முதல் முறையாக பங்கேற்கிறார் சானியா. அதைத் தொடர்ந்து விம்பிள்டன் போட்டியில் கலந்துகொள்கிறார்.
தொடர்ந்து அக்டோபரில் காமன்வெல்த் போட்டியிலும், பின்னர் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் சானியா விளையாடவுள்ளார்.