லைலா மீண்டும் வரும் அபாயம்- மேற்கு வங்கம், ஒரிசாவில் உஷார் நிலை
லைலா புயல் பலவீனமடைந்து, ஆந்திராவின் பபட்லா பகுதியில் கரையைக் கடந்து விட்டது. ஆனால் அது மீண்டும் கடலுக்குள் நுழைந்து மேலும் பலம் பொருந்திய புயலாக வரக் கூடும் என டெல்லி இந்திய வானியல் கழகம் எச்சரித்துள்ளது.
அப்படி வரும்போது மேற்கு வங்கம், ஒரிசா அல்லது வங்கதேசத்தில் அது பெரும் பாதிப்பையும், சேதத்தையும் ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், ஒரிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அறிவுறுத்தியுள்ளன.
மேற்கு வங்கத்தில் ஆறு கடலோர மாவட்டங்களில் உஷார்நிலை அறிவிக்கப்பட்டு அங்குள்ள மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். வடக்கு, தெற்கு 24 பர்கானா மாவட்டங்கள், கிழக்கு மிதினாப்பூர், ஹெளரா, ஹூக்ளி மாவட்டங்களில் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் இன்று மாலை முதல் பலத்த கடற் காற்று வீசக் கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க மாநில நிதியமைச்சர் ஆசிம் தாஸ்குப்தா கூறியுள்ளார்.
இன்று காலை 7.30 மணி நிலவரப்படி, லைலா புயல் ஆந்திர மாநிலம் மசிலிப்பட்டினம் அருகே நிலை கொண்டுள்ளது.
தற்போதைய சூழல்படி, இது மேலும் பலவீனமடைந்து முதலில் வடக்கு நோக்கியும், பின்னர் வட கிழக்கில் ஒரிசாவை நோக்கியும் நகரத் தொடங்கும்.
இதன் தாக்கத்தால், வடக்கு கடலோர ஆந்திரா, தெலுங்கானாவில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக மழையும், ஆங்காங்கே மிக பலத்த மழையும், சில இடங்களில் மிக மிக பலத்த மழையும் பெய்யும்.
அடுத்த 24 மணி நேரத்தில் மணிக்கு 85 முதல் 95 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக் கூடும்.
ஆந்திர கடல் பகுதியில் அடுத்த 12 மணி நேரத்திற்கு கடல் சீற்றத்துடன் காணப்படும். மீனவர்கள் கடலுக்குள் போக வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
கடலோர மற்றும் தெற்கு ஒரிசாவில் அடுத்த 48 மணி நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலான காற்று வீசக் கூடும்.
படிப்படியாக புயல் வடக்கு வங்கக் கடலில் நுழைந்து வலுவான புயலாக மாறக் கூடும் என கணிக்கப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி லைலா புயல், ஒரிசா மாநிலம் கோபால்பூரிலிருந்து 570 கிலோமீட்டர் தென் மேற்கில் நிலை கொண்டிருந்தது.