மசூதி இடிப்பு-அத்வானிக்கு எதிரான சதி வழக்கு: சிபிஐ கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்
லக்னெள: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோரை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், வினய் கத்யார், சிவசேனா தலைவர் பால் தாக்கரே உள்ளிட்ட 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரேபரேலியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இவர்களி மீது கிரிமினல் சதி உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்திருந்தது.
ஆனால், இந்த வழக்கில் பாஜக தலைவர்கள் மீதான கிரிமினல் நடவடிக்கைகளை ரத்து செய்து 2001ம் ஆண்டு மே மாதம் 4ம் தேதி தள்ளுபடி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரி்த்த நீதிபதி நீதிபதி அலோக் குமார் சிங்,அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தனது 44 பக்க தீர்ப்பில், சிறப்பு நீதிமன்றம் சரியான தீர்ப்பையே வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பை திருத்தவோ அல்லது அதில் குறுக்கிடுவதற்கோ எந்த முகாந்திரமும் இல்லை. எனவே அந்த உத்தரவில் தலையிட முடியாது என்று கூறியுள்ளார்.
ஆனாலும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் பாஜக தலைவர்கள் ஆட்சேபகரமாக பேசியதாக ரேபரேலி நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும்.