'பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்பதை மக்களே முடிவு செய்து கொள்ளவேண்டும்!'
கொழும்பு:தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் தொடர்பாக இன்னும் பல முரண்பட்ட தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கும். ஆனால் தேசியத் தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என்பதை தமிழ் மக்கள் தாங்களாகவே புரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு பா. அரியநேத்திரன் இது குறித்து மேலும் கூறியது:
தலைவர் கடந்த வருடம் மே 17ஆம் தேதி கொல்லப்பட்டாரென இலங்கை அரசாங்கம் முதலில் அறிவித்தது. ஆனால் 18ஆம் தேதிதான் அவர் கொல்லப்பட்டாரென ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
ஆனால் யுத்த முனையில் நின்று படையினரை வழிநடத்தியவரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா 19ஆம் திகதி தான் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று ஒரு வருடத்தின் பின்னர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் வேறு தரப்பினர் கூட வேறு வேறு தேதிகளைச் சொல்லக்கூடும்.
எனவே பிரபாகரன் கொல்லப்பட்டிருக்கிறாரா? உயிருடன் உள்ளாரா? என்பதைத் தமிழ் மக்கள் சுயமாகவே புரிந்து கொள்ள வேண்டும்," என்றார்.