நாடு கடந்த தமிழீழ அரசு உருவாகியதால் பீதி-சிதைக்க இலங்கை அரசு தீவிரம்
கொழும்பு: எங்கே வரப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்த நாடு கடந்த தமிழீழ அரசு தடாலடியாக உருவாகி விட்டதால் பீதியடைந்துள்ள இலங்கை அரசு அதை குலைக்கவும், சிதைக்கவும் களம் இறங்கியுள்ளதாம்.
புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு தற்போது ஒரு மையப் புள்ளி கிடைத்துள்ளது. அதுதான் நாடு கடந்த தமிழீழ அரசு. இதுகுறித்து பல்வேறு சர்ச்சைகள், வாதங்கள், பிரதிவாதங்கள், கருத்து பேதங்கள் இருந்தாலும் ஈழத் தமிழர்களின் குரலாக இதுதான் இனி சர்வதேச அரங்கில் ஒலிக்கும் என்பது மறுக்க முடியாத ஒன்றாகியுள்ளது.
இலங்கைக்கு எதிராக, அதன் இனவாதத்திற்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசின் மூலம் குரல் கொடுக்கப் போகின்றனர் ஈழத் தமிழர்கள். இதன் தலைவராக ருத்திரகுமாரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் சுதந்திரம் பிரகடனம் செய்யப்பட்ட பிலடெல்பியா நகரில், சுதந்திர சதுக்க அரங்கில் 2 நாட்கள் நடத்தப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசின் மாநாடு பல்வேறு நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதனால் இலங்கை அரசு பீதியடைந்துள்ளது.
தற்போது இந்த நாடு கடந்த தமிழீழ அரசின் மூலம் இலங்கையின் சுயரூபத்தை அம்பலப்படுத்தி, தூதரக ரீதியில், அந்தநாட்டுக்கு நெருக்கடி தர தமிழீழ அரசு களம் இறங்கியுள்ளது.
சட்டபூர்வமான முறையில் இந்த அரசு அமைப்பு உருவாகியிருப்பதால் நிச்சயம் இதை மேற்கத்திய நாடுகள் புறக்கணிக்கும் வாய்ப்பில்லை. சட்ட ரீதியாக, இலங்கைக்கு நெருக்குதல்களைக் கொடுத்து ஈழத்தில் புழுவாய் மாற்றப்பட்டு துடித்துக் கொண்டிருக்கும் தமிழர்களுக்குரிய உரிமைகளையும்,சலுகைகளையும் பெற்றுத் தரும் முக்கியக் கடமையை இந்த நாடு கடந்த தமிழீழ அரசு மேற்கொள்ளவுள்ளது.
இந்த அரசால் தனக்கு பெரும் நெருக்குதல்கள் வரும் என பயந்து போயுள்ள இலங்கை அரசு இதன் முயற்சிகளைத் தடுக்கவும், சீர்குலைக்கவும் தேவையானவற்றை செய்யுமாறு உலகம் முழுவதும் உள்ள தனது தூதரகங்களை இலங்கை அரசு முடுக்கி விட்டுள்ளதாம்.